Translate this blog to any language

புதன், 29 அக்டோபர், 2008

காலமற்ற காலம் - அன்பில் உணர்வது!

நீள அகல உயரம் முப்பரிமாணம்; அறிவில் காண்பது; உலகமாவது அளவைக்குட்பட்டது! காலமற்ற காலம் நான்காம் பரிணாமம்; அன்பில் உணர்வது; தியானமாவது அளவு கடந்தது! - யோஜென் பால்கி

🌸☘️🌹

குறை காணும் கண்கள்

(இந்த கவிதை எப்படியோ கைபட்டு போய்விட்டது! நினைவில் இருந்து மீண்டும் எழுதுகிறேன்)

ஓயாமல் நம்மை ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறோம்!

உனது கண்ணில் நானும் எனது கண்ணில் நீயுமாய் தென்படும் குறைகள்!

அட! குறை என்பது தான் என்ன?
நீ என்னிடம் காணும் குறைகள் பிறர் பார்வையில் நிறைகளாய் உணரப்படும்; உனதும் அவ்வாறே!

உண்மையில், எனது குறைகள் என்பன ஒரு பார்வைக் கோண மாறுபாட்டில் உட்குவிந்த நிறைகளே எனலாமே!

YozenBalki 

எனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா ?

அவர்கள் எப்போதுமே தியானத்தில் தானே இருக்கிறார்கள்நாம்தான் அவர்களுக்குள் பிரிவினைகளை கற்பித்து இருக்கிறோம். நாடு, மதம், ஜாதி, மொழி, உயர்வு, தாழ்வு இவற்றை போதித்து அவர்களது தியானத்தை கெடுத்ததே நாம்தான்! ஆபாசப் படங்கள் எடுத்து திரைப்படம், தொலைக்காட்சி, இன்டர்நெட் வழியாக உலகை கெடுப்பது நமது குழந்தைகள் கிடையாதே! அதுவுமன்றி, வன்முறைகளை ஏதோ ஒரு கொள்கையின் பேரால் தூண்டிவிடுவது, செயற்கை பஞ்சம் உருவாக்குவது, காடு மலைகளை அழிப்பது இவை யாவற்றையும் பெரியவர்களான நாமே செய்து வருகிறோம்! குழந்தைகளின் கண்களை பாருங்களேன்! அங்கே ஒரு புத்தர், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், ஸ்ரீ கிருஷ்ணரின் அமைதியை உணர்வீர்கள். குழந்தைகளிடம் நாம்தான் தியானம் கற்றுக் கொள்ளவேண்டும்! மாறாக

தேங்கிய குட்டை ஆகாய கங்கைக்கு சுத்த நீர் பற்றிக் கற்பிக்கக்கூடாது. 

குழந்தைகளிடம் அன்பாயிருங்கள், ஆதரவாய்ப் பேசுங்கள்! அதுவே குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவி

வெறும் அறிவு புகட்டுதல் என்பது உயிரற்ற பொம்மையை சிங்காரிப்பது போன்ற அபத்தம் ஆகும்! 

  -யோஜென் பால்கி


இரு சும்மாய் இரு!

பொருளுலகம் விடுதற்கு ஒன்றுமிலை கைவிலங்கு அருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை இருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ வெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு! இடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும் நலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும் மதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே மூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்! - யோஜென் பால்கி

பெருஞானம் இதுமுக்தி!

மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்! உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ? துண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி மண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை! உறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும் தருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்! நகமின்றி விரல்வாழும் யாக்கை போலும் விரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்! இருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும் பெருங்குழுக்கள் கூடுவதை கூட்டம் என்பர்! மனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம் எண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம் பிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம் பொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே நீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும் வேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும் அவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று ஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று! மாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய் காயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம் வெறுமையென அறிகில்லாய் மனமே நீயே! பெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே! 
  - YozenBalki

செவ்வாய், 28 அக்டோபர், 2008

நாளையெனும் மூட- மனம் !


நாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து
வேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது
காலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்
சோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்

இல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது
வில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்
தொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்
தில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்!

குளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி
களிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து
புளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு
தெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது!

சேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்
பார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை
கோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்
மூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென!

-மோகன் பால்கி

உயிரின் நாடகம்!


பால்வெண்ணை தயிராகும் தயிர்பாலும் ஆகாதே
நால்வேடம் ஏற்றாலும் உயிர்ஒன்றின் நாடகமே
நானென்ப துடலன்று மனமன்று உணர்ந்தாரை
கொனேன்பர் மறையிலைநீர் அருளாளர் !

உள்ளுக்குள் உள்ளாக உள்ளமனம் ஆன்மாவது
உள்ளிருந்து வெளிப்போந்து விரிகையிலே மனமாம்
மனம்விரிய நானென்ற ஆணவமும் அதுதொடர
கன்மமலம் மாயமலம் தொடரும் தானே!

-மோகன் பால்கி

பிரார்த்தனை - தியானம் !


பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் என்ன வேறுபாடு?

பிரார்த்தனை என்பது வேண்டுதல்!
தியானம் என்பது அந்த வேண்டுதலையும்
கை விட்ட நிலை!
பிரார்த்தனை,
ஒரு குழந்தை உரிமையோடு
தன் தந்தையிடம்
அது வேண்டும், இது வேண்டும்
என்று கேட்பதாகும்.

தியானம்,
ஞானத்தில் முதிர்ந்தவன்
இதுவரை கிடைத்தவற்றிற்கு
இறைவனுக்கு நன்றி கூறி
எதையும் இனி
வேண்டாத நிலையாகும்.

இரண்டுமே மிகவும் அழகானது!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

திங்கள், 27 அக்டோபர், 2008

இருப்பதோ இல்லாமை!


குரு:: இருந்தது இல்லை...
இருப்பது இல்லாமை!
கொடுப்பதற்கு எதுவும்
இவ்விடம் இல்லை!

சீடன்: இல்லாமையை தாருங்கள்
என் அன்பு குருவே !

குரு: இல்லாமை சூன்யம்-
சூன்யம் வெறுமை!

தரப்பட முடியாதது....
உணரப்படக் கூடியது மட்டுமே!

-மோகன் பால்கி

அன்பை அன்பறியும்!


அன்பை அன்பே அறியும் !
அன்பை ஆணவம்
ஒருபோதும் அறிவதில்லை!

நீரை நீர் அறிந்து
கலக்கும் எளிதாக !

நீருக்குள் பாறை
யுகம் யுகமாய் இருந்தாலும்
பாறை கரைவதில்லை;
கரைந்து கலப்பதில்லை!

அம்மட்டோ ?
பாறையுடன் பாறையே
சேர்வதில்லை!
ஆணவமும் ஆணவமும்
அப்படித்தான்!

அன்பு
பெரும் சக்தி-
ஒருசக்தி !
ஆணவம்
தனி இயக்கம்
பிண முயக்கம்!

எளிய ஆணவமும்
புத்தப் பேரன்பை
ஒருக்காலும் அறியாது!

அன்பை
அன்பே அறியும்-
அன்பை
ஆணவம்
ஒருபோதும் அறிவதில்லை!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

இதுவே அதிகம் - இறைவா!


அய்யனே !

நீ என்
ஆழ்ந்த மையத்தில்
அமைதியாய் அமர்ந்தவன்!
என் மையம் உணர்ந்தவன் !
அது
ஒன்றே போதும்
எனக்கு!

நீ என்னில் இருந்து
என்னை ஆள்பவன் - எந்தன்
ஆண்டவன்!

என் உள்ளும்-புறமும்
யாவுமறிந்தவன் !
மையப் பகுதியில்
கோவில் கொண்டவன்!

போதும் இறைவா!
இதுவே அதிகம்!

இனி,
பிறவி-நூறையும்
பொறுமையாய்க் கடப்பேன்!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

Rolling Stocks ! இரயில் பெட்டிகள்



எந்தக் குழந்தையும்
தன் தாய் தந்தையை
"அம்மா" "அப்பா"
என்றழைக்கும் போது
எனக்கு ஏனோ
அந்த
நெடிதுயர்ந்த ஆலமரத்தின்
விழுதுகளே நினைவுக்கு வரும்!

அதுகளே
"மம்மி" "டாடி"
என்று கத்தும் போது
அந்த
ஐரோப்பிய
இரயில் பெட்டிகளே
நினைவுக்கு வருகின்றன;

எப்போது வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ள -
கழன்று செல்ல !

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

Eternal Slaves ! நிரந்தர அடிமைகள் !


நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்....
நிரந்தர அடிமைகளாய் நாம்!

ஐந்து முப்பதுக்கு எழுந்து
ஆறேகாலுக்குள் ஆயத்தமாகி
ஆறு இருபத்தைந்து
பேருந்து பிடித்து-
ஏழு பத்து ரயிலைப் பிடித்து
எட்டு நாற்பது பேருந்தை
மீண்டும் ஓடிப் பிடித்து
தொங்கியவாறு பயணம் செய்து
ஒன்பது மணிக்குள்
அலுவலகப் பதிவேட்டில்
கையெழுத்திட வேண்டும்!

இதற்குள் எல்லாம்
சரியாக
நடக்க வேண்டும்!

மீண்டும் ஐந்து மணிக்கே
அலுவலகம் முடிந்தாலும்
மேலே இருப்பவனின்
மெச்சுதல் வேண்டி
ஆறுக்கோ ஏழுக்கோ கிளம்பி
ஒன்பதுக்கோ பத்துக்கோ
வீட்டைச் சேர்கையில்
புறநகர் முழுதும்
மொத்தமாய் தூங்கும் !

வீட்டுப் பாடங்களை
முடித்து விட்டு
அப்பாவின் முகத்தைக் காண
ஆவலாய் காத்திருந்த
குழந்தைகள்
அரைத் தூக்கத்தில்
அரை குறையாய்ப் பேசும்!

அவற்றிற்கும்
அதனதன் கவலை!

காலையில் எழுந்து
மிச்ச சொச்ச பாடங்களை
முடித்து விட்டு
பள்ளிக்கு கிளம்ப வேண்டுமே!

இப்படியாக ஒவ்வொரு நாளும்...

நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்
நிரந்தர
அடிமைகளாய் நாம்!

"இந்தக் கணத்தில்"..1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

தாமரை அழகில்லை!


சூரியன் எழுமுன்
எழுந்து போய்
தாமரை மலர்வதைக் காண
பேராவல் எனக்கு !

நகர வாழக்கையில்
அதற்கு எங்கே போவது?

இதோ!

அதை விடப் பேரழகாய்
என் குழந்தை
காலையில்
கண் மலர்ந்தாள்!

-"இந்தக் கணத்தில்".... - 1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

Meditation "Happens" - தியானம் - "நிகழ்கிறது"!


நான் தியானம் செய்கிறேன்...

என்று எவராவது சொன்னால்
அது மிகவும் தவறான வார்த்தையாகும்!
நம்மை விட பிரம்மாண்டமானதை
நாம் எப்படி செய்ய முடியும்?

அது கிட்டத்தட்ட

"நான் காற்று செய்யப் போகிறேன்"
"நான் தூக்கம் செய்யப் போகிறேன்"
என்பதைப் போன்ற அபத்தமாகும்!

தூக்கத்தை நம்மால் செய்ய முடியாது;
அது நம் உழைப்பின் களைப்பினால்
பரிசாகக் கிடைப்பது!
அதனால்தான் உடல் உழைப்பற்றவர்களால்
சரிவரத் தூங்க முடிவதில்லை!

தூக்கம் என்பது செயல் அன்று!
அது
உழைப்பின் பயன் ஆகும்!

மரக் கன்றுகள் நடுவது நமது செயல்;
அதில் பழம் வருவதோ வராததோ
அதன் பயன் ஆகும்!

நாம் மரக் கன்றுகள் நடலாம் - அதில்
நம்மால் பழம் வரவழைக்க இயலாது!

நாம் தியானத்துக்காக அமரலாம் - ஆனால்
தியானத்தை நம்மால் செய்ய இயலாது!

உண்மை என்னவென்றால்,

அழுக்குகள் நீங்கியவிடத்து
சுத்தம் தெரிவதைப் போன்று
மன மாசுகள் நீங்கியவிடத்து
தியானம் நிகழ்கிறது!

-"வாழ்வும் தியானமும் ".... - 2004
யோஜென் பதிப்பகம்
-மோகன் பால்கி

எது பேராண்மை?



சுதந்திரம் - இறைவன்
இவற்றில்
இரண்டில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும்படி
என்னிடம் சொன்னால்
நான் முதலில்
சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்!

ஏனெனில்
சுதந்திர உணர்வற்ற
குறுகிய மனம்
எவ்வாறு
எல்லைகளற்று விரிந்த
இறைவனை அறியும்?

சுதந்திரம் என்பது
நடு-நிலைப் பார்வை!

அனைத்து வித
சித்தாந்த
கூடாரங்களில் இருந்தும்
வெளியேறி

வெட்டவெளியில்
தனியனாய் நின்று
உண்மையை தரிசிக்கும் பேறு!

பொய்மைக் கோட்டைகளைப்
பொடிப்பொடியாக்கும்
பேராண்மை!

-மோகன் பால்கி

அழிவற்ற பிரம்மம்!


உதிப்பது மறைவது போல
நம் விழிகளுக்கு
தோன்றினாலும்
நமது உயிர்-சூரியனோ
ஒரு நாளும் மறைந்ததில்லை !

"நீ - நான்" கூட அவ்வாறே!

இருப்பது அழிவ துண்டா?


-மோகன் பால்கி

ஐயனே ஒளியே - ஓமெனும் நாதமே !

ன்னமும் டையும் ல்லமும் ந்துயிர்
காற்றினை தினை ந்தையே ழையென்
யனேளியே மெனும்நாதமே ஒளவியம் தீர்த்தாட்
கொண்டனை அக துன் அருளே !

*******

முத்தொழில் மூலவர் அத்தொழில் முதல்வ
எத்தொழில் ஏவிட 'இத்தைப்" படைத்தையோ
அத்தொழில் மேவிட வித்தகம் செய்திட
சத்தெனக் கருள்க ஆள்க !

*******

கருவாய் துவங்கி எருவாய் வரையும்
உருவாய் அருவாய் திருமால் மறையே
தருவாய் திருவாய் தருவன வெல்லாம்
நிறைவாய் எம்பணி செய்திடு மாறே !

********

சுடலையின் நடனம் இடுகிற சங்கர
உடலையின் உள்ளொளி சிவசிவ சங்கர
கடலுறை விடமும் பகையும் அங்கற
பிறவாத் தவநிலை சிவசிவ நமசிவ!

********

அன்புரு அன்னைஎந்தை ஆடலின் கூடலண்டம்
பின்புருக்கொண்டும் விண்டும் அகண்டிடுமின்னு மண்டம்
இன்மையில் இருப்பும்தன்மைக் காற்றினில்நெருப்பும் வைத்த
வன்மைஅவ் இறைவ வாழி!

-மோகன் பால்கி

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

Universe - My Master ! இயற்கை - சத்குரு !

பொய்யை விரும்புவது போல
உண்மையை யாருமே
விரும்புவது இல்லை!

உண்மையைக் கண்டு நாம்
அஞ்சி நடுநடுங்குகின்றோம் !

ஏனென்றால்
உண்மை பாரபட்சம் அற்றது-

வேண்டியவர் - வேண்டாதவர்
இருவரையுமே அது
ஒரே தராசில் வைத்து
நிறுத்திப் பார்க்கிறது;
தீர்ப்பு சொல்கிறது!

பின் எப்படி நாம்
உண்மையை உண்மையாகவே
விரும்ப இயலும்?

பஞ்சபூத இயற்கையும்
பாரபட்சம் அற்றதே!
ஓரம் சாராததே!

தீயை தொட்டால்
புத்தர்களையும் அது சுடுகிறது!
பனிக்கட்டியோ
எவருக்குமே குளிர்கிறது!

ஆக,
உண்மையின் இன்னொரு பெயர்
"இயற்கை"!

அது சரி!
இயற்கைக்கு மற்றுமொரு
பெயரும் உண்டு!
அது என்ன தெரியுமா?

அதுதான் "சத்-குரு"!


- மோகன் பால்கி

எல்லையற்று விரிதலே - ஞானம்!


எல்லையற்று விரிதலே
ஞானமடைதல் ஆகும்-
சுருங்கி அடைபடுதல் அன்று!

காற்று அடைபட்டு நிற்பதில்லை-
அது
நிலங்களின் பெயர்களை
பொருட் படுத்துவதும் இல்லை!
ஐம்பூதங்களும் அவ்வாறே!

தத்துவ ஞான வார்த்தைகளில்
சிறை படாமல்
வாழ்வை
நடுவில் நின்று பார்த்தலே
தவம் எனப்படும்!

அப்படிப்பட்ட தவத்தின் பயனே
"ஞானம்" ஆகும்!

ஞானம் பிரிவுகள் அற்றது!

விழிப்பு, கனவு, உறக்கம் என்னும்
மூன்று நிலைகளிலும்
அதில்
ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
"துரியம்" என்னும்
நிலையே அக் தாகும்!

அதனையே "துரிய மெய்ஞானம்"
என்று ஆன்றோர்கள்
குறிப்பால் உணர்த்துவர்!

-மோகன் பால்கி

புதன், 22 அக்டோபர், 2008

"கருத்துப் - பிழை"


என் நண்பனே !

எனது வலிகளை நீ
அறிந்திருக்க நியாயம் இல்லை தான்!

அம்மா கூட
ஆற்றுப் படுத்தலாம்
அவ்வளவே தவிர
உள்ளே கிடக்கும் இரணங்களை
உள்-நுழைந்து பார்க்க
யாரால்தான் இயலும்!

ஒருவர் வலியை
இன்னொருவர் அறிய
இங்கு
வழியே இல்லை!

காக்கையின்-பசி-வலியும்
எருதின்-புண்-வலியும் போல...!

எந்த வலி பெரிது
எது அதிக நியாயம் என்று
எந்த புத்தர் வந்து
உன்னிடம் விளக்கி
புரிய வைக்கப்போகிறார்!

இருப்பினும்,
நான்
இப்போது உணர்கிறேன்..

நீயும் நானும் ஒன்றே என்ற
சிறியதொரு
"கருத்துப் பிழையில்" தான்
வெடிக்கிறது என்
விவஸ்தையற்ற பெரும் கோபம்!

-மோகன் பால்கி

Riches - The Risker ! பணக்காரன்-ஒரு "பணயக்காரன்"!


பணக்காரன்
என்பவன்
ஒரு மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

அவன் தனது உயிரை
அதைவிட
தன்
மானத்தை...
"தன்-மானத்தை"
ஒரு மிகப் பெரும்
இலட்சியத்துக்காக
பணயம் வைக்கத் துணிகிறான்!

எதையும் இழக்காமல்
இங்கு
எதுவுமே கிடைப்பதில்லை!

ஆம்
பணக்காரன்
ஒரு
மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

-மோகன் பால்கி

செல் போன் "பிணி" போல் ....! ( Mobile phone a Dis-ease!)

இறுகி வரும் எனது வேலி!

சுகம் தரும் பாதுகாப்பு என்றும்
சுதந்திரம் என்றும்
பொய்யாய் கருதிய
போலி நினைப்புகள்..

முதன் முதல்
செல் போன் ஒலித்த போது..
அழைத்த போது
இருந்த ஆனந்தம்
இன்று இறந்தது!

கையடக்க கருவி வழி
வையகம் வாழ் யாரிடமும்
நினைத்த நேரத்தில்
நான் பேச முடிவது
சுதந்திரம்
என்று தவறாய்க் கருதிக்
கிடந்தேன்!

இன்றுதான் தெளிந்தேன்-
உலகின்
எந்த மூலையில் இருந்தும்
எந்த நொடியிலும்
யார் வேண்டுமானாலும்
காதுகளுக்குள்
கந்தகப் பொடி வீசி
என் சுதந்திரம்
கெடுக்கலாம் என்று!

எந்த ஒரு மையத்தில் இருந்தும்
புறப்படும் கயிறுகள்
ஒரு வழிப் பாதை அல்ல !

எல்லா இடங்களிலும்
விரல்கள் அல்ல-நண்பர்களே!

பொம்மைகளே கயிறுகளைப்
பிடித்து ஆட்டுகின்றன!

வாழ்க்கை வெறும்
பொம்மலாட்டம் அல்ல!

அது ஒரு பொம்மலாட்ட-
கயிறாட்டம்!

எந்த ஒரு சுதந்திரமும்
இன்னொரு-வகை
அடிமைத்தனமே!

-Mohan Balki

புதன், 15 அக்டோபர், 2008

Anger - A creative State! கோபம் - ஒரு ஆக்க நிலை!


கோபம்....

நமது இயலாமையின் வெளிப்பாடு
நம் மீது நாம் கொள்ளும் ஆத்திரம்!

கொசுவின் மீது யாரும்
ஆத்திரம் கொள்வது கிடையாது!

கொசு
தொல்லையே செய்கிறது !

புயல் காற்றின் மீதும்
யாரும் கோபம் கொள்வது இல்லை !

ஆனால்

நம்மால் இயலுமா இயலாதா
என்னும் கையறு நிலைகளில் தான்
கோபம் ஏற்படுகிறது!

அதாவது
கொசுத் தொல்லைக்கும்
புயல் காற்றிற்கும்
இடையிலான நமது சக்திக்குட்பட்ட
சந்தேகப் பிரதேசங்களில் தான்
ஆத்திரமானது
ஒரு அழையா விருந்தாளியாக வந்து
நம் தலைக்குள் அமர்கிறது!

கோபம் ஒரு தேக்கம் -
ஆத்திரம் ஒரு அவஸ்தை !
விழுங்கவும் இயலாமல்
துப்பவும் முடியாமல்
தவிக்கும் ஒரு தவிப்பு!

எந்தவொரு முயற்சியும்
இந்தத் தவிப்பில் இருந்தே
ஆரம்பம் ஆகி இருக்கிறது!

ஆம்!
தவிப்பு இல்லையேல்
முயற்சியும் இல்லை !

முயற்சியில் அவஸ்தை உண்டு
முயற்சியில் துன்பம் உண்டு!

உடல் பயிற்சியின் பொது கூட
நாம் பார்த்திருக்கிறோமே !

வலியும் வேதனையும்
தசைகளில் இருக்கும்;

மறுநாள் பயிற்சி தொடர
மனம் மறுக்கும் !

மனதை ஒதுக்கி வலியை பொறுத்தால்
விடாப் பயிற்சியில் வீரனாகலாம் !

வலியில்லாமல் வடிவம் உண்டா?
முயற்சியிலாத பரிசுதான் உண்டா?

ஒவ்வொரு வலியும் நீள நீட்சியே ;
துன்பம் யாவுமே மெய் வளர்ச்சியே !

எங்கே வலி இருக்கின்றதோ
அங்கே மௌனமாய் ஒரு
வளர்ச்சி நடைபெறுகின்றது
என்றே பொருள் !

ஆக
நம் சக்திக்குட்பட்ட கோபம்
நம் சாத்தியத்துக்கு உட்பட்ட வளர்ச்சி!

வளர்ச்சி - வலி!
தாங்கியே தீரவேண்டும்!

ஆயினும்
கோபம் தன்-வளர்ச்சி சார்ந்தது!
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க நினையாதது!

கோபம்
தேக்கி வைக்கப்பட்ட
அணைக்கட்டு-நீர்!

ஆக்க வேலைகள் பலவும்
அவனுக்கு
காத்துக் கிடக்கின்றன!

மாறாக
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க எண்ணும் கோபம்
'பொறாமை' ஆகிறது !

பொறாமைத் தீ - ஒரு பூமராங் போல!
புறப்பட்ட இடத்தையே வந்தடைந்து
அனுப்பியவனையே
அது அழித்து விடுகிறது!

கோபம் ஒரு ஆக்க நிலை!
பொறமையோ வெறும்
தேக்க நிலை மட்டுமே!

கோபத்துக்கு
ஒரு நதியின் குணம் உண்டு!

குட்டையின் குணமே பொறாமைக்கு!

மலையில் இருந்து
தலைக் குப்புற விழுந்த கோபத்தில்
புறப்படும் நதி
பாலை வனங்களில் பசுமை பரப்பி
நாடுகள் தாண்டி கடலைச் சேரும்!

நதியின் கோபமே-பூமியின் பூரிப்பு!

பசுமையின் அடர்த்தி என்பது
நதித்தலை படர்ந்த
கோபத்தின் அடர்த்தியே!

அடர்ந்த கோபம்-தொடர்ந்த பசுமை!

சீறிப் பாயும் நதி-சீரிய வளமை!

ஒரு காந்தியின் கோபமே
சுதந்திர பாரதம் !

கோபத்துக்குள் விகித முரண்கள்
ஆயிரம் இருக்கலாம்!

அகிம்சை கோபம்-அறிவுக் கோபம் !
ஆத்திரக் கோபம்-அவசரக் கோபம் !
வறுமை கோபம்-வாலிபக் கோபம் !
பொறுத்துப் பொங்கிய தீவிரக் கோபம் !
இப்படியாக எண்ணிலாக் கோபம்!

ஓடுகள் உடைத்து மண்ணைக் கிழித்து
வானம் பார்க்கும்
கோப விதையே விருட்சம்-சுபிட்சம் !

எழுச்சி இல்லையேல்
கருவிதை-கல்லைறை!

கதகதப்பூட்டி அடைகாக்கும் போதும்
குஞ்சுப் பறவையின்
சின்ன அலகே
முட்டைத் தடைகளை
முட்டி உடைக்கும்!

மனிதக் குழந்தையும் அவ்வாறே !
இருகால் முயற்சி
தாய்க்கென்றாலும்
மறுகால் தலைமை
சிசுவின் பணியே !

இயக்கம் என்பதே
இருகை கூட்டு!
நதியின் விரிவும்-பூமியின் சரிவும் போல்!

தலைக் குப்புற
மலை மீதிருந்து விழுந்த
கோப-நதி' போல்
வீரியத்தோடு
புறப்பட்டு போங்கள் !

சுற்றுப் புறங்களைப்
பசுமை ஆக்குங்கள் !

உங்கள் கோபம்
ஆக்க சக்தியின்
அற்புத வடிவம்!

அணைந்து விடாமல்
ஒளி பரவட்டும்!

- மோகன் பால்கி

செவ்வாய், 14 அக்டோபர், 2008

உட் குழிந்த குறைகள் !


குறை காணும் கண்கள்.....

உனது பார்வையில் நானும்
எனது பார்வையில் நீயுமாய்...!

அட !
குறை என்பதுதான் என்ன?

எனது இயலாமையை

உனது 'இயலுமையால்'
நிரவும் முயற்சியின்
பதட்டம் தானே !

உண்மையில்
என் குறை என்பதும்
உன் குறை என்பதும்
பார்வை கோண மாறுபாட்டில்
ஒளிரும்
'ஒரு-பரிமாண'
உரு வெளி பிம்பமே!

மேலும்
நீ காணும் எனது
'உட் குழிந்த' குறைகள்
'வெளிக் குவிந்த' நிறைகளாக
வேறொரு கோணத்தில்
வேற்றாரால் உணரப்படும் !

உனதும் அவ்வாறே !

ஆம்!
அறிவு காணும் குறைகள் என்பன
"ஒரு-பரிமாண"
தோற்ற மாயையே !

அன்பில் உணரும்
உச்ச உண்மையே
"பல்-பரிமாண"
வாழ்வின் இரகசியம் !

-மோகன் பால்கி

Me - A fragment of Nature! நான் இயற்கையின் கூறு!


நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை

இயற்கையின் அடையாளம்

ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி

Life - The Great Master ! வாழ்வு ஒரு ஞானாசிரியன் !

வாழ்வு ஒரு ஞானாசிரியன்!

அது
நூலகங்களில்
அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற
ஏராளமான புத்தகங்கள்
கற்றுத் தருவதைக் காட்டிலும்
அதிகமானதை
நமக்குக் கற்றுத் தருகிறது!

ஆயினும்
வாழ்வின் படிப்பினைகளை
நாம் நம்பத் தயாரில்லை!

மேலும்
உண்மைகளை விட
நாம் பொய்களையே
அதிகம் நேசிக்கிறோம் !

ஏனெனில்
பொய்மை எப்போதுமே
அழகு மிக்கது போன்றும்
நம்பிக்கையூட்டுவது போன்றும்
தோற்றம் அளிக்கிறது !

- மோகன் பால்கி

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

முதலில் சரியான வாழ்வு!

என்னைக் கேட்டால்
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!

ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!

ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்

மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!

- மோகன் பால்கி

வெறும் சப்தம் !

எனது சில நூறு சொற்கள்
ஏதோ ஒரு மனிதனை
உள்ளும் புறமும் மாற்றி

அவனை மகிழ்வித்து
அடுத்தவர்களையும்
மகிழ்விக்கும் எனில்

அதற்காக நான்
ஆயிரம் சொற்களைப்
பேச தயார்!

அல்லாமல்

மனித மனங்களைப்
பண்படுத்தாத
எந்த ஒரு ஆடம்பரப் பேச்சும்

வெறும் சப்தமும்
சுய தம்பட்டமுமே ஆகும்!

- மோகன் பால்கி

Me - A son of this Soil ! நான் பூமியில் பிறந்த மனிதன்!

வானத்தில் இருப்பதாக
கருதப் படுகிற
தேவர்களைப் பற்றி
பேசுவதைக் காட்டிலும்
நான்
பூமியில் வாழ்கிற
மனிதர்களைப் பற்றி பேசுவதையே
பெரிதும் விரும்புகிறேன்!

ஏன் என்றால்
நான்
பூமியில் பிறந்த
மனிதன்!

- மோகன் பால்கி

வெள்ளி, 10 அக்டோபர், 2008

Time - Shore "காலக் கடற்கரை"



கிளிஞ்சல்கள் திரட்டி
மணல் வீடு கட்டி
வண்ணப் பட்டம்
பறக்க விடுகின்ற
அறியாச் சிறுசுகள்!

கிளிஞ்சல்கள் பொறுக்கி
கைப்பொருள் செய்யவும்
'சிறுவீடு ' கட்டி
'பட்டங்கள்' தரவும்
முனைந்து நிற்கும்
மெய்ஞான பெருசுகள்!

வாழ்வின் அடிநாதம்
வார்த்தைகளில் இல்லை!
வண்ண - வடிவ
அரு - உருவில் இல்லை!
வாழ்க்கை என்பது
வாழ்ந்தவன் அனுபவம்!

விரி பிரபஞ்சம்
விளக்கமானது - விளக்கமற்றது!
காலநதியின்
கணக்கறு மணலாய்
கோடி சூரியன்
மின்னி மறைந்தன!
எண்ணறு புத்தர்கள்
இனியும் வருவர்!

விளக்க முடியாததை....
விளக்க முற்படும்....
விளங்காச் சிறுவராய் !!

- மோகன் பால்கி