Translate this blog to any language

வெள்ளி, 28 நவம்பர், 2008

கடந்து வந்த கால-உச்சிகள்!



மாமலை இடையில்
சிறு மரம் மீதில்
வாழ்ந்திடும்
வாலிபக் குரங்கு!

கொள்கைக் கிளைகளை
'அப்படி' 'இப்படி'
அடிக்கடி மாற்றி
சிரித்தும் பழித்தும்
பேசிக் கழித்து
மகிழ்ந்து தான் கிடக்கும்!

"இதுவே உச்சி"
"முடிந்த முடிவென"
தளர்ந்த முதுமைக்
குரங்கிடம் சென்று
தவறாமல் நின்று
தம்பட்டம் அடித்திடும்!

வயோதிகக் குரங்கோ
தன்வாலிபம் முழுதும்
உச்சியை அறிய
தேடித் தேடி
உழைத்துக் களைத்த
சோர்வில் சிரிக்கும் !

அதன் தேடல் என்றோ
முற்றும் முடிந்தது!

இதை விடப் பெரிய
அரிய மரங்கள் !
ஒன்றை ஒன்று
விஞ்சிடும் மலைகள்!
முடிவேயற்ற உயர உச்சிகள்
கண்டு விண்டு
கடைசியில் சோர்ந்து
'கண்டது கண்மணி அளவு'
காணாதது கற்பனை அளவென'
உணர்ந்து உள்வாங்கி
சின்னப் புள்ளியாய்
அடங்கிக் கிடக்கும்!

இளைய குரங்கின்
இனிய பிரதாபமோ
இன்னும் இன்னும்
பின்னும் தொடரும்...

முதிர்ந்த மலைக் குரங்கோ
ஏதும் பேசாது
மவுனமாய்
நகைக்கும்-

தானும் கடந்து வந்த
'கால உச்சிகளை'
எண்ணி
எண்ணி !

-மோகன் பால்கி

15th July 2000

from MBK Diary



தேன் மலை-நாடு!


எழுது என்கிறை
எதை நான் எழுத?
தேன் என்று எழுதிட
இனிக்குமோ நாக்கு ?

தேனைப் பற்றி
ஆயிரம் நூல்கள்
ஓதியும் என்ன?
தேடல் உள்ளவர்
ஒருவருக்கேனும்
சொட்டுத் தேனை
சுவைக்கத் தருதலே
'இவனின்' ஆசை!

எத்தனை மலைகள்
எத்தனை இடர்கள்
அத்தனை தாண்டி
கொணர்ந்த தேனிது!
குறைவே எனினும்
நிறைவாய்த் தருவேன்!

இடர்களைப் பற்றி ...
அனுபவம் பற்றி ....
நெடுங்கதை பேசி
நெஞ்சு வலித்திட
நிற்க வைத்திடேன்-
ஒருபோதும் நான்!


இந்நாள் மட்டும்
வெறும் பேச்சினால்
மீண்டும் மீண்டும்
விளைந்தது பேச்சே!


தேனை சுவைத்தவர்
எவரோ ஒருவர்
நெருங்கி ஒரு நாள்
'இதனிடம்' வந்து

"அத்தனை ருசியாய்
அந்நாள் நீவிர்
அளித்தது என்ன-
எங்குஅது உளது-
என் கடன் என்னென"
தாகம் மீக்குற
ஆவல் கண்களை
விரித்திடு நாளில்.....

உவகை நெஞ்சுடன்
கைவிரல் பற்றி
ஆதரவோடு
அழைத்துப் போவேன்-
தெய்வமும் போற்றிடும்
"தேன் மலை- நாடு"!

- மோகன் பால்கி
20th March 1999
Kavidhai from MBK Diary





வெற்றி சத்தியம்!


முடியாதென்றவர்
முடங்கிப் போயினர்!

முடியும் என்றவர்
தடை பல தகர்த்தே
செய்து முடித்தனர்-

சரித்திரம் சொன்னது!

இலக்கை நோக்கி
செலுத்திய அம்பு
மீண்டும் கைக்குத்
திரும்பியதில்லை!

விரும்பிய நோக்கம்
உறுதி என்றாயின்
உள்மனம் முடிக்கும்-
வெற்றி சத்தியம்!

-மோகன் பால்கி
April 1999
MBK Kavidhai from

Hypnotic Circle-Chennai Bulletin


காலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்!


ஒவ்வொரு அணுவிலும்
தனித் தன்மை
இப் பிரபஞ்சம் முழுவதிலும்!

ஆதரவற்ற காட்டு மலரிலும்
அற்புதம் கசியும் ஏதோ ஒன்று!

அதை விட மேலாம்
ஏதோ ஒன்று
நமக்குள்ளும் இல்லையா?

நமது விதையிலும்
ஆயிரம் வாய்ப்புகள்...
காலம் காத்திருக்கிறது-மவுனம் சுமந்து !

நம் கற்பகத் தருவின்
பங்களிப்பிற்காக !

-மோகன் பால்கி
10th March 1999
MBK Kavidhai from

Hypnotic Circle-Chennai Bulletin



கொஞ்சம் வீரமாய் மாறு!


கொஞ்சம் விட்டுக் கொடு-
கொஞ்சம் சண்டை இடு!
வாழ்வின் விதி இதுதான் !

நீயோ,
சண்டையிட வேண்டிய
இடங்களில்-
தருணங்களில்
அடங்கிப் போகிறாய்-
சமரசப் படவேண்டிய போது
சண்டையிட்டு நிற்கிறாய்!

உனது பிரச்சினைதான்
உலகின் பிரச்சினையும்!

விஷயங்களை
வைக்க வேண்டிய இடத்தில் வைக்க
கற்றுக் கொள்!

ஆம்,
கொஞ்சம் வீரமாய் மாறு-
கொஞ்சூண்டு விட்டுக் கொடு!


-மோகன் பால்கி
3rd January 2004
From MBK Diary

செவ்வாய், 18 நவம்பர், 2008

ஒரு துளி அமைதி!




ஒரு துளி அமைதி
ஓராயிரம்
தெய்வீக
வார்த்தைகளைக் காட்டிலும்
புனிதமானது!

-மோகன் பால்கி



"எதை' எதாக மாற்ற?


உலகில் இதை அதாகவும்
அதை இதாகவும் மாற்றுவதற்கு
'நான்' முயன்றேன்!

ஆனால்,
அன்பைப் போதிக்க
ஆயுதம் ஏந்தும்படியாகவும்

அகிம்சையைப் புரிய வைக்க
பிறரை இம்சிக்கும்படியாகவும்
ஆகிப் போனது!

உலகம் அதாகவே இருந்துவர
'நான் தான்" வேறு எதாகவோ
மாறிப் போனதை உணர்ந்தேன்!

"நான்" அழிந்தபோது....

உலகம் உயிர்த்தது!

-மோகன் பால்கி

பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்!




ஒரு மர வளர்வும கால முதிர்வும்
இணைந்து தருவது ஒரு பயன் என்னில்
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்
பல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் !

ஒரு மரம் வளர்ப்போன் அத்தனை யுக்தியும் 
அம்மரந்தன்னில் அமுக்கி வளர்ப்பதாம்
நினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே!
ஒன்றெலா மென்றுமே தோட்ட மாகிடா!

விதவிதம் விதைப்போன் அனுதினம் உடல்மன
வலிகள் பொறுத்து தோட்டம் காப்போன்
தொய்விலா முயற்சியில் முளைப்பனவற்றில்
வருபொருள் நீட்டமே  பன்மைப் பயனாம்!

-மோகன் பால்கி

Intra Day/Bonanza
T.Nagar
19.04.2007

திங்கள், 17 நவம்பர், 2008

குரு ஒரு கெட்ட பழக்கம் !



எப்போதுமே
ஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக
இன்னொரு கெட்ட பழக்கம்
தவறாமல் வந்து நம்மைச்
சேர்கிறது!

ஆம்!
நல்லதொரு சீடனுக்கு
குருவும் ஒரு கெட்ட பழக்கம்தான்!
விட முடியாத
கடைசி கெட்ட பழக்கம்!

ஆனால்,
குருவே முன் வந்து
தன்னை விடச்சொல்லி
சீடனை
வேறொரு கெட்ட பழக்கத்துக்குள்
வலிந்து
தள்ளி விடுகிறார்!

கடைசி கடைசியான
அந்தக் கெட்ட பழக்கத்துக்கு
பெயர்தான் 'தியானம்'
அல்லது
'இறைவன்'!

-மோகன் பால்கி
கில்ட் பில்டிங்
தியாகராய நகர்
சென்னை



புதன், 12 நவம்பர், 2008

இரட்டை நாக்கு "பாதி- சேஷனா"?


'கல்லானாலும் கணவன்'
'புல்லானாலும் புருஷன்'
எனினும்

எவ்வளவு தூரம் தான்
அவமானங்களை;
அடி உதைகளைத்
தாங்கமுடியும் என்பதை
அந்த
மனைவி அல்லவா
தீர்மானிக்க வேண்டும்?

அப்படிக்கின்றி
அதையெல்லாம் தீர்மானிப்பது
அவளது
புருஷன் கூட இல்லை;
அக்கம் பக்கத்தில் வாழும்
"அதி மேதாவிகள்தான்" என்று
ஏதேனும் நாட்டில்
புது வித பழக்கம்
இருக்கிறதா என்ன?

எங்கு இருக்கிறதோ இல்லையோ
இங்கே இருக்கிறது நண்பனே
அவ்விதப் பழக்கம்!

பக்கத்து நாட்டில்
அவமானப் பட்டு
அடி உதை பட்டு
காலகாலமாய்
உயிர்விடுகின்ற
தாய் மொழித் தமிழரை

இன்னும் படு-நன்றாய்ப் படு!
நக்கிப் பிழைத்து
நாய் போல் வாழ்ந்திடு!


இன்னும் குனிந்து
அடங்கிப் போ என
"மேதைகள்" சிலரிங்கு
சொல்லும் உரிமையை
மமதையை என் சொல?

'பசு வதை' தடுக்க
ஆத்திரப் படுபவர்-
பூச்சி புழுக்களில்
இறைவனை காண்பவர்-
"எல்லாம் பிரம்மம்"
என்று கதைப்பவர்-
இந்தக் கதையிலோ
வீடண ஆழ்வார்!

எப்படி இந்த
இரட்டை அளவுகோல்?

ஐயோ இவர்கள்
மனிதர்கள் தானா ?
இரட்டை நாக்கு
"பாதி- சேஷனா"?

-மோகன் பால்கி

செவ்வாய், 11 நவம்பர், 2008

நல்லோர் உலகு எள்ளிச் சிரிக்கும்!



தன்னலத்தில் இருந்து விரியும்
பொதுநலமே மெத்தச் சரி!

தன்னை விரும்பாதவனின் ;
தன்மொழி-இனத்தை விரும்பாதவனின்
பொதுநலத்தை
என்னென்று சொல்லி அழ ?

இயற்கையின் மொழியும் அதுவன்றோ?

ஒளி- ஒலி கூட
அருகில் அதிகமாகவும்
தூரம் செல்லச் செல்ல
அடர்த்தி குறைந்தும்தான்
மறைந்து போகிறது!

மனிதா நீ மட்டும் எவ்வாறு
தலைகீழாய்
இலக்கணம் வகுக்கிறாய்?

முதலில்
"அகில உலக சமத்துவமாம்" !!

அதன்பின்
"அகண்ட தேசியம்"-
"மொழிவாரி மாநிலம்"-
மாவட்ட நலம்,
வட்டம்,
பகுதி,
தெருக்கள்,

அதன் பின்

உன் வீடு
என்வீடு,
என்மக்கள்

அதன் பின் தானாம்
தன் நலம் சுய-நலம் !

ஆகா அருமை!

ஐயோ!
குழப்பத்தின்
ஒட்டுமொத்த குத்தகைக்காரனே!

ஏதோ ஒரு
தூர தேசத்து அம்மாவையும்
வேற்று மொழி நாட்டையும்
அங்கே ஒரு
ஊர் பேர் தெரியாத குடும்பத்தையும்
பற்றிப் பேசி
அவர்களை
பெரிதும் நேசிக்கும்
ஒரு நல்லவன் போல் காட்டி
'நோபிள்' பரிசு பெறத் துடிக்கிறாய்!

உன் சொந்தச்-சோதரர்கள்
துன்பம் காண்கில்லாய்!

உனது
இந்த நடிப்பையும் துடிப்பையும் கண்டு
உன் இனமும்
குடும்பமும்
உன் தாய்மொழி பேசும்
நல்லோர் உலகும்
உள்ளுக்குள்
எள்ளிச் சிரிப்பதை
உன் அறியாமை உள்ளம்
ஒருபோதும்
அறியாதோ நண்பனே ?


- மோகன் பால்கி

திங்கள், 10 நவம்பர், 2008

உண்மையை எப்படி கண்டுகொள்வது?


ஒரு மாணவன் குருவைப் பணிந்தான்!

"குருவே! நான் உண்மையை எப்படிக் கண்டு கொள்வது?"
என்று வினவினான்!

குருவும் பதில் சொல்லலானார்!

என் அன்புக்குரிய மாணவனே!
நீ மிகவும் அற்புதமான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்!
உண்மையை கண்டு கொள்வது மிகவும் எளிதானது;
மிகவும் கடினமானதும் கூட!

ஆம்!
உண்மையை கண்டுகொள்வது
உணமையானவர்களுக்கு
மிகவும் எளிதானது!
உண்மையற்றவர்களுக்கோ
அதைத் தெரிய வாய்ப்பில்லாததனால்
அது மிகவும் கடினமானது!

ஒரு மகா சமுத்திரத்தில்
எண்ணிக்கையற்ற மீன்களுக்கிடையில்
தன் தாயை மீன் குஞ்சுகள் கண்டு கொள்வதைப் போல
உண்மையை உண்மை, தானே கண்டுகொள்ளும்!
இடையில் ஒருவர் இருந்து கொண்டு
இதுவே உன் தாய் என்று
எவரும் உறுதிப் பாத்திரம் தரத் தேவையில்லை !

உண்மையின் குணாம்சமே அதுதான். சிறப்பும் அக்தேயாம் !
உண்மை தன் காலில் தான் நிற்க வல்லது!
உண்மை சுய நிரூபணம் உடையது.
உண்மை சுயம்ப்ரகாசமானது; அடக்கமானது.
இயல்பானது!

அதாவது தங்கத்தை உதாரணத்திற்கு
எடுத்துக்கொள்வோம்!
உண்மைத் தங்கம் பித்தளைகளின்
விளம்பர உதவியை நாடுவதில்லை!
அதைப் பார்த்த மாத்திரத்திலேயே
அது தங்கம்தான் என்று
தானாகவே தெரிந்து விடுகிறது!

ஆனால்,
பொய்க்கோ விளம்பரம், ஆடம்பரம், நடிப்பு
தேவைப்படுகிறது!
மேலும்
பொய்க்கு மின்ன வேண்டிய அவசியம் உள்ளது!
தன்னை பிறர் நம்ப வேண்டும் என்ற காரணத்தால்
தொடர்ந்து ஏதோ ஒரு 'ஒப்பனை' செய்து கொண்டே இருக்கிறது!
எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக பொய்
ஏதேனும் சாகசங்களில் ஈடுபடுகிறது.
மற்றவர்களின் புகழ்ச்சிக்காக
அது எந்நேரமும் ஏங்குகிறது!

ஊரிலேயே பேரழகும் பேரறிவும் ஒருங்கே அமைந்த
ஒரு இளம்பெண்
எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு
இழுத்துப் போர்த்தியவாறு வீதியில் நடந்து செல்கிறாள்!
அவளது ஆடை அணிகலன்கள் எளிமையானவை.
யாருடைய கண்களையும் அது உறுத்துவதில்லை!
சப்தமிடும் கொலுசு அணிந்து
மற்றவர்களின் கவனத்தை அவள் கவர்வதில்லை!
கூடை கூடையாய் கொண்டையில் பூக்களை ஏற்றி
வண்டுகளை அவள் ஈர்ப்பதில்லை!
அர்த்தமற்ற வெறும் பேச்சுகளில் சில்லறை சிரிப்புகளை
வலியக் கலந்து காற்றில் விடுவதில்லை!

வளது வாழ்வும் பயணமும் ஒரு தென்றலின் கவிதை!
அவள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை!
'பாதச் சுவடுகளே தென்படாத'
"பறவை பறந்த வானம் போல"
நிர்மலமானது அவளின் வாழ்க்கை!
உயிரும் உணர்வும் உள்ளவன் மட்டுமே
காத்திருந்து ஒருநாள்
அவளைக் கண்டு கொள்கிறான்!
இறந்து போனவர்களும்
ஆடம்பரச் சீமான்களும்
அவளைக் காணமாட்டார்கள்!

அதே ஊரில் ஒரு குணமிலியும் இருக்கிறாள்!
அழகும் அறிவும் குறைந்தவள்!
எனவே,
அவற்றைத் தன்னிடம் இருப்பதாகக்
காட்டிக்கொள்ள விழைகிறாள்!
அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிகிறாள்!
கண்கூசும் நிறங்கள், சப்தமிடும் அணிகலன்கள் கொண்டு
மற்றவர்களின் கவனத்தை கவர்கிறாள்.
கூடை கூடையாய் தலையில் பூ வைத்துக் கொள்கிறாள்!
வேண்டுமென்றே யாரையோ ஈர்பதற்காக
திடீரென்று வலியச் சிரிக்கிறாள் !
திருத்தமாய் பேசி தன்னை
அறிவு மிகுந்தவளாகக் காட்டிக்கொள்ள,
பாவம்! எப்போதுமே முயற்சிக்கிறாள்!

அவளது வாழ்வும் பயணமும் ஒரு சூறாவளியின் மிச்சம்!
அவளுடைய முழு வாழ்வும் ஒரு திறந்த நூலகப் புத்தகம்;
சிறந்த புத்தகம் அன்று!
தீயவர்களே அவளைப் படிக்கிறார்கள்.
பக்கங்களை மடிப்பதும் கிழிப்பதுமாக
மரியாதை இன்றியும்
நடந்து கொள்கிறார்கள்.
கடைசியில் அந்தப் புத்தகம்
தூக்கி எறியப்பட்டு குப்பைக்குப் போகிறது!

எல்லாப் பொய்களுக்கும் இதுவே முடிவாகும்!
உண்மையோ,
கோவிலின் கர்பக்கிருகத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும்!
உண்மையை
உண்மையே கண்டு கொள்ளும்'
என்றார் குரு!

-மோகன் பால்கி

தேசம் செழிப்பாயிற்று!


அது மிகவும் குறுகலான சந்து

முதல் நாள் !

இரண்டு ஆணவக் காரர்கள்
எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டனர்.
அங்கே
கடும் சண்டை உருவாயிற்று!
சாம்ராஜ்யங்கள் அழிந்தன!

இரண்டாம் நாள்!

ஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
அங்கே
வெறும் சலசலப்பு உண்டாயிற்று!
நாட்டில் நல்லதும் நடக்கவில்லை-
கெட்டதும் நடக்கவில்லை!


மூன்றாம் நாள்!

ஒரு நல்லவனும் இன்னொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
'குற்றம் தன்னுடையதே' என்று
இருவரும்
ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு
மன்றாடினர்!
அங்கே
ஒரு உன்னத நட்பு உருவாயிற்று;
அவர்களது தேசம் செழிப்பாயிற்று!

-மோகன் பால்கி

நான் இயற்கையின் கூறு!



நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்!

ஆதியந்தமற்ற

இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி

செவ்வாய், 4 நவம்பர், 2008

கூடார அடிமைகள்!



"பகுத்து அறியாத அறிவு" என்பது

இன்னும் பயன்படுத்தாத

ஒரு வெறும் கருவியே ஆகும்!

எந்த ஒரு மனிதனும் பொருள்களும்

ஆராய்ச்சிக்கு உட்பட்டைவையே!

வெற்று நம்பிக்கைகளும்

வெறும் மூடக் கொள்கைகளும்

எவரையும் முன்னேற்றுவது இல்லை!

தன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட

சராசரி மக்கள்தான்

ஒரு சாதாரண மனிதனை

கடவுள் தன்மை கொண்டதொரு

பெரும் மகானாக சித்தரிக்க

பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள் !

காரணம் யாதெனில் ,

அது மறைமுகமாக

தனக்கே நன்மை செய்து கொள்வதற்கான

ஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் !

அதாவது,

'இன்ன சாமியாரின் சீடன் நான்'

என்று பறை சாற்றுவதன் மூலம்

எதுவும் செய்யாமலேயே

ஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்

அங்கு மறைந்து கிடக்கிறது!

மேலும்,

கூட்டம் அல்லது கூடாரம் என்பது

நல்லதொரு பொழுது போக்கையும்

ஒரு வித

பாதுகாப்பு உணர்ச்சியையும் தருவதனால்

மனிதர்கள்

தன்விருப்பத்துடனேயே

இதுபோன்ற

"பொய்மை கூடாரங்களைத்"

தேடியலைந்து நிரந்தரமான

அடிமையாகி விடுகிறார்கள் !


உண்மையோவெனில்,

வெட்டவெளியில்

ஒரு

"உண்மை-தேடியின்" வரவுக்காய்

தன்னந்தனியே அது

பொறுமையாய்க்

காத்திருக்கிறது!

-மோகன் பால்கி