Translate this blog to any language

வெள்ளி, 30 ஜூலை, 2010

இது போன்ற கருவிகள் இல்லாமல் "சாலை-தர-நிர்ணயம்" சாத்தியம் இல்லை! Standardize Everything - To ensure Quality!


ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் நல்ல சாலைகள் போடப் படுவதை உறுதிப் படுத்திக் கொள்ள,  "சாலைத் தரம்- கண்காணிக்கும் கருவிகள்" உள்ளன! 


முதலில் காண்பது "தரம் காணும் இயந்திரம்-கருவி".

இரண்டாம் படம், தெரு/சாலைகளில் உள்ள மேடு-பள்ளங்களின் அளவை "map " -ஆகக் காட்டுவது!  
அதாவது சாலையின் மேடு பள்ளங்களை அளவிடும் கருவி மூலம் பெருகின்ற
வரைபடம். மூன்று கோடுகள் முறையே, சாலையின் அகலத்தில் மூன்று இடங்களில் உள்ள சமம்-சமமற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன. இன்னும் அகலமான சாலைகளுக்கு நான்கு, ஐந்து என்று சென்சார்களை கூட்டிக் கொள்ளலாம்-அதன் மூலம் அதற்குத் தக்கபடி நான்கு, ஐந்து வரை படங்கள் நமக்குக் கிடைக்கும்.

 

இது போன்று, தரம் பார்ப்பது என்பது "இந்திய-நெடுஞ்சாலைத் துறையில்' சற்றே காணப் படுகிறது!  ஆனால், உள்வட்டச் சாலைகளில் அது பூஜ்ஜியம்!

மேற்படி கருவிகள் செய்வது ஒன்றும் ராக்கெட்  அனுப்பும் செலவு போன்றது அல்ல! விட்டால் நம்ம ஊரில் சேலம்-திருச்சி கல்லூரிகளில் படிக்கும் நம் கிராமப் புற மாணவர்களே இதை விட சிறப்பான கருவியை ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தாண்டாமல், செய்து தந்து விடுவார்கள்! ( ஏற்கனவே பல சிறப்பான கருவிகள் செய்து 'பேடன்ட் ரைட்' உட்பட வாங்கியுள்ளனர் )அது போன்ற கருவியை ஊருக்கு ஒன்று செய்து போட்டு-தரம் கண்காணித்து நமது நாட்டையும்  ஐரோப்பிய நாடு போல நம்மால் செய்ய இயலும்-அரசுக்கு மனம் இருந்தால்!

"அரங்கின்றி வட்டாடியற்றே" என்பது போல, இது போன்ற கருவிகள் இல்லாமல் நம்மூர்  "தெருக்கள்/சாலைகள் - தர-நிர்ணயம் / மற்றும் மீள் பரிசோதனை" சாத்தியம் இல்லை!
மேலும், அப்படிக்கின்றி, சம்பந்தப் பட்ட அதிகாரிகளை தோளில் துண்டு போட்டு பிடித்து வைத்து, "தரம்-பற்றிய" கேள்வியையும் ஆதாரத்தோடு எவரும் கேட்க இயலாது! 

நாம் யோசித்து என்ன ஆகப் போகிறது - நாடு உருப்பட, ஆளும் மகானுபாவர்கள் தான் கொஞ்சம் மனது வைக்கவேண்டும்! 

மகாஜனங்களும், "அப்படி என்ன அவர் தப்புப் பண்ணிட்டார்...மத்தவா பண்ணாத தப்பா...?"என்று சப்பைக் கட்டு கட்டாமல், தவறு செய்யும் அதிகாரிகள், ஒப்பந்தக் காரர்கள் போன்றோரை தண்டிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்! 

குறைந்தது, குற்றம் செய்பவர்களுக்குப்  பரிந்து பேசாமல் வாயைப் பொத்தி வைத்துக் கொண்டு இருந்தாலே போதும்! அது, இந்த நாட்டு வருங்கால சந்ததிகளுக்கு எவ்வளவோ நல்லது!

-மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: