Translate this blog to any language

புதன், 29 அக்டோபர், 2008

காலமற்ற காலம் - அன்பில் உணர்வது!

நீள அகல உயரம் முப்பரிமாணம்; அறிவில் காண்பது; உலகமாவது அளவைக்குட்பட்டது! காலமற்ற காலம் நான்காம் பரிணாமம்; அன்பில் உணர்வது; தியானமாவது அளவு கடந்தது! - யோஜென் பால்கி

🌸☘️🌹

குறை காணும் கண்கள்

(இந்த கவிதை எப்படியோ கைபட்டு போய்விட்டது! நினைவில் இருந்து மீண்டும் எழுதுகிறேன்)

ஓயாமல் நம்மை ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறோம்!

உனது கண்ணில் நானும் எனது கண்ணில் நீயுமாய் தென்படும் குறைகள்!

அட! குறை என்பது தான் என்ன?
நீ என்னிடம் காணும் குறைகள் பிறர் பார்வையில் நிறைகளாய் உணரப்படும்; உனதும் அவ்வாறே!

உண்மையில், எனது குறைகள் என்பன ஒரு பார்வைக் கோண மாறுபாட்டில் உட்குவிந்த நிறைகளே எனலாமே!

YozenBalki 

எனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா ?

அவர்கள் எப்போதுமே தியானத்தில் தானே இருக்கிறார்கள்நாம்தான் அவர்களுக்குள் பிரிவினைகளை கற்பித்து இருக்கிறோம். நாடு, மதம், ஜாதி, மொழி, உயர்வு, தாழ்வு இவற்றை போதித்து அவர்களது தியானத்தை கெடுத்ததே நாம்தான்! ஆபாசப் படங்கள் எடுத்து திரைப்படம், தொலைக்காட்சி, இன்டர்நெட் வழியாக உலகை கெடுப்பது நமது குழந்தைகள் கிடையாதே! அதுவுமன்றி, வன்முறைகளை ஏதோ ஒரு கொள்கையின் பேரால் தூண்டிவிடுவது, செயற்கை பஞ்சம் உருவாக்குவது, காடு மலைகளை அழிப்பது இவை யாவற்றையும் பெரியவர்களான நாமே செய்து வருகிறோம்! குழந்தைகளின் கண்களை பாருங்களேன்! அங்கே ஒரு புத்தர், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், ஸ்ரீ கிருஷ்ணரின் அமைதியை உணர்வீர்கள். குழந்தைகளிடம் நாம்தான் தியானம் கற்றுக் கொள்ளவேண்டும்! மாறாக

தேங்கிய குட்டை ஆகாய கங்கைக்கு சுத்த நீர் பற்றிக் கற்பிக்கக்கூடாது. 

குழந்தைகளிடம் அன்பாயிருங்கள், ஆதரவாய்ப் பேசுங்கள்! அதுவே குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவி

வெறும் அறிவு புகட்டுதல் என்பது உயிரற்ற பொம்மையை சிங்காரிப்பது போன்ற அபத்தம் ஆகும்! 

  -யோஜென் பால்கி


இரு சும்மாய் இரு!

பொருளுலகம் விடுதற்கு ஒன்றுமிலை கைவிலங்கு அருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை இருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ வெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு! இடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும் நலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும் மதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே மூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்! - யோஜென் பால்கி

பெருஞானம் இதுமுக்தி!

மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்! உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ? துண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி மண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை! உறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும் தருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்! நகமின்றி விரல்வாழும் யாக்கை போலும் விரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்! இருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும் பெருங்குழுக்கள் கூடுவதை கூட்டம் என்பர்! மனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம் எண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம் பிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம் பொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே நீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும் வேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும் அவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று ஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று! மாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய் காயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம் வெறுமையென அறிகில்லாய் மனமே நீயே! பெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே! 
  - YozenBalki

செவ்வாய், 28 அக்டோபர், 2008

நாளையெனும் மூட- மனம் !


நாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து
வேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது
காலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்
சோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்

இல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது
வில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்
தொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்
தில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்!

குளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி
களிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து
புளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு
தெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது!

சேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்
பார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை
கோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்
மூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென!

-மோகன் பால்கி

உயிரின் நாடகம்!


பால்வெண்ணை தயிராகும் தயிர்பாலும் ஆகாதே
நால்வேடம் ஏற்றாலும் உயிர்ஒன்றின் நாடகமே
நானென்ப துடலன்று மனமன்று உணர்ந்தாரை
கொனேன்பர் மறையிலைநீர் அருளாளர் !

உள்ளுக்குள் உள்ளாக உள்ளமனம் ஆன்மாவது
உள்ளிருந்து வெளிப்போந்து விரிகையிலே மனமாம்
மனம்விரிய நானென்ற ஆணவமும் அதுதொடர
கன்மமலம் மாயமலம் தொடரும் தானே!

-மோகன் பால்கி

பிரார்த்தனை - தியானம் !


பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் என்ன வேறுபாடு?

பிரார்த்தனை என்பது வேண்டுதல்!
தியானம் என்பது அந்த வேண்டுதலையும்
கை விட்ட நிலை!
பிரார்த்தனை,
ஒரு குழந்தை உரிமையோடு
தன் தந்தையிடம்
அது வேண்டும், இது வேண்டும்
என்று கேட்பதாகும்.

தியானம்,
ஞானத்தில் முதிர்ந்தவன்
இதுவரை கிடைத்தவற்றிற்கு
இறைவனுக்கு நன்றி கூறி
எதையும் இனி
வேண்டாத நிலையாகும்.

இரண்டுமே மிகவும் அழகானது!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி