Translate this blog to any language

வெள்ளி, 28 நவம்பர், 2008

கடந்து வந்த கால-உச்சிகள்!



மாமலை இடையில்
சிறு மரம் மீதில்
வாழ்ந்திடும்
வாலிபக் குரங்கு!

கொள்கைக் கிளைகளை
'அப்படி' 'இப்படி'
அடிக்கடி மாற்றி
சிரித்தும் பழித்தும்
பேசிக் கழித்து
மகிழ்ந்து தான் கிடக்கும்!

"இதுவே உச்சி"
"முடிந்த முடிவென"
தளர்ந்த முதுமைக்
குரங்கிடம் சென்று
தவறாமல் நின்று
தம்பட்டம் அடித்திடும்!

வயோதிகக் குரங்கோ
தன்வாலிபம் முழுதும்
உச்சியை அறிய
தேடித் தேடி
உழைத்துக் களைத்த
சோர்வில் சிரிக்கும் !

அதன் தேடல் என்றோ
முற்றும் முடிந்தது!

இதை விடப் பெரிய
அரிய மரங்கள் !
ஒன்றை ஒன்று
விஞ்சிடும் மலைகள்!
முடிவேயற்ற உயர உச்சிகள்
கண்டு விண்டு
கடைசியில் சோர்ந்து
'கண்டது கண்மணி அளவு'
காணாதது கற்பனை அளவென'
உணர்ந்து உள்வாங்கி
சின்னப் புள்ளியாய்
அடங்கிக் கிடக்கும்!

இளைய குரங்கின்
இனிய பிரதாபமோ
இன்னும் இன்னும்
பின்னும் தொடரும்...

முதிர்ந்த மலைக் குரங்கோ
ஏதும் பேசாது
மவுனமாய்
நகைக்கும்-

தானும் கடந்து வந்த
'கால உச்சிகளை'
எண்ணி
எண்ணி !

-மோகன் பால்கி

15th July 2000

from MBK Diary



தேன் மலை-நாடு!


எழுது என்கிறை
எதை நான் எழுத?
தேன் என்று எழுதிட
இனிக்குமோ நாக்கு ?

தேனைப் பற்றி
ஆயிரம் நூல்கள்
ஓதியும் என்ன?
தேடல் உள்ளவர்
ஒருவருக்கேனும்
சொட்டுத் தேனை
சுவைக்கத் தருதலே
'இவனின்' ஆசை!

எத்தனை மலைகள்
எத்தனை இடர்கள்
அத்தனை தாண்டி
கொணர்ந்த தேனிது!
குறைவே எனினும்
நிறைவாய்த் தருவேன்!

இடர்களைப் பற்றி ...
அனுபவம் பற்றி ....
நெடுங்கதை பேசி
நெஞ்சு வலித்திட
நிற்க வைத்திடேன்-
ஒருபோதும் நான்!


இந்நாள் மட்டும்
வெறும் பேச்சினால்
மீண்டும் மீண்டும்
விளைந்தது பேச்சே!


தேனை சுவைத்தவர்
எவரோ ஒருவர்
நெருங்கி ஒரு நாள்
'இதனிடம்' வந்து

"அத்தனை ருசியாய்
அந்நாள் நீவிர்
அளித்தது என்ன-
எங்குஅது உளது-
என் கடன் என்னென"
தாகம் மீக்குற
ஆவல் கண்களை
விரித்திடு நாளில்.....

உவகை நெஞ்சுடன்
கைவிரல் பற்றி
ஆதரவோடு
அழைத்துப் போவேன்-
தெய்வமும் போற்றிடும்
"தேன் மலை- நாடு"!

- மோகன் பால்கி
20th March 1999
Kavidhai from MBK Diary





வெற்றி சத்தியம்!


முடியாதென்றவர்
முடங்கிப் போயினர்!

முடியும் என்றவர்
தடை பல தகர்த்தே
செய்து முடித்தனர்-

சரித்திரம் சொன்னது!

இலக்கை நோக்கி
செலுத்திய அம்பு
மீண்டும் கைக்குத்
திரும்பியதில்லை!

விரும்பிய நோக்கம்
உறுதி என்றாயின்
உள்மனம் முடிக்கும்-
வெற்றி சத்தியம்!

-மோகன் பால்கி
April 1999
MBK Kavidhai from

Hypnotic Circle-Chennai Bulletin


காலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்!


ஒவ்வொரு அணுவிலும்
தனித் தன்மை
இப் பிரபஞ்சம் முழுவதிலும்!

ஆதரவற்ற காட்டு மலரிலும்
அற்புதம் கசியும் ஏதோ ஒன்று!

அதை விட மேலாம்
ஏதோ ஒன்று
நமக்குள்ளும் இல்லையா?

நமது விதையிலும்
ஆயிரம் வாய்ப்புகள்...
காலம் காத்திருக்கிறது-மவுனம் சுமந்து !

நம் கற்பகத் தருவின்
பங்களிப்பிற்காக !

-மோகன் பால்கி
10th March 1999
MBK Kavidhai from

Hypnotic Circle-Chennai Bulletin



கொஞ்சம் வீரமாய் மாறு!


கொஞ்சம் விட்டுக் கொடு-
கொஞ்சம் சண்டை இடு!
வாழ்வின் விதி இதுதான் !

நீயோ,
சண்டையிட வேண்டிய
இடங்களில்-
தருணங்களில்
அடங்கிப் போகிறாய்-
சமரசப் படவேண்டிய போது
சண்டையிட்டு நிற்கிறாய்!

உனது பிரச்சினைதான்
உலகின் பிரச்சினையும்!

விஷயங்களை
வைக்க வேண்டிய இடத்தில் வைக்க
கற்றுக் கொள்!

ஆம்,
கொஞ்சம் வீரமாய் மாறு-
கொஞ்சூண்டு விட்டுக் கொடு!


-மோகன் பால்கி
3rd January 2004
From MBK Diary

செவ்வாய், 18 நவம்பர், 2008

ஒரு துளி அமைதி!




ஒரு துளி அமைதி
ஓராயிரம்
தெய்வீக
வார்த்தைகளைக் காட்டிலும்
புனிதமானது!

-மோகன் பால்கி



"எதை' எதாக மாற்ற?


உலகில் இதை அதாகவும்
அதை இதாகவும் மாற்றுவதற்கு
'நான்' முயன்றேன்!

ஆனால்,
அன்பைப் போதிக்க
ஆயுதம் ஏந்தும்படியாகவும்

அகிம்சையைப் புரிய வைக்க
பிறரை இம்சிக்கும்படியாகவும்
ஆகிப் போனது!

உலகம் அதாகவே இருந்துவர
'நான் தான்" வேறு எதாகவோ
மாறிப் போனதை உணர்ந்தேன்!

"நான்" அழிந்தபோது....

உலகம் உயிர்த்தது!

-மோகன் பால்கி