Translate this blog to any language

புதன், 24 மார்ச், 2010

இவர்கள் தான் நம் அரசியல் வாதிகள்! (This is our present Politicians)

அரசியல் வாதிகள் உலகம் முழுவதும் எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்களேன்! தெருச் சண்டைக்காரர்களைப் போலவும்....தூங்கு மூஞ்சிகள் போலவும்!


                                                                        

கடைசியில் சீன அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தில் தூங்குவதைப் பாருங்கள்!

முதலில் மேலே இருப்பது இந்தியா !!


                                                              

                                                               


        

திங்கள், 15 மார்ச், 2010

நம்ம நடிகர் அடடே மனோகர் - பாடல்களைக் கேளுங்கள்!


அடடே மனோகர்! என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு?

அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லிங்க் அனுப்பியிருந்தார்.
மனோஹரின் மிக்கத் தெளிவு, இறைமை பற்றிய தனது மேலான கருத்துக்கள், தானே எழுதி, இசை அமைத்த தனது இறை/தத்துவ/நிலையாமை /வாழ்வியல்உண்மைகள் பற்றிய கருத்துக்களை மற்றும் பாடல்களைக் கேட்டேன்! அதை அனைவரும் கேட்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், தனது வலைத் தளத்தில் இருந்து பிறர், பதிவிறக்கம் செய்யுமாறு அமைத்துள்ள உள்ளப் பாங்கு கண்டு வியப்பும் பெரு மகிழ்வும் கொண்டேன். பாடல்கள் பாடி இசை அமைத்துப் பதிவு செய்வது என்பது சின்ன விஷயம் அல்ல! அந்தப் பணியை எப்படியோ செய்து மெனக் கெட்டு பின்னர் அதை "சும்மா" தருவதற்கும் அவர் பெரிய தொழில் அதிபரோ சூப்பர் ஸ்டாரோ அல்ல! ஏதோ ஒரு இறைமையின் உந்துதல் அவரிடம் இருக்கிறது-இல்லாவிடில் இதை செய்ய முடியாது என்பது எனது கருத்து! சுமார் நாப்பத்தி ஒரு பாடல்களுக்கு மேல், அதில் வரவு எதுவும் இருக்காது என்று தெரிந்தே எழுதி, இசை அமைத்து, ஒலிப் பதிவு செய்வது-அதிலும் தரமாக- என்பது சாதாரண வேலை அல்ல!
இவர் ஒரு வித்தியாசமான நடிகர்-அதை விட மேலாக நம் சம காலத்தில் வாழும் ஒரு நல்ல உயிர்!
அவர் மேலும் நல்ல உடல்/மன/ஆன்ம நலம் பெற்று நீடு வாழ்க என்று வாழ்த்துவோம்!


நீங்களும், அவரது வலைத் தளத்துக்குத் தவறாமல் இப்போதே செல்லுங்களேன்!
http://adademanohar.blogspot.com/
அதை புக் மார்க் செய்து வையுங்கள்; சமயம் வாய்க்கும் போது அவரது அர்த்தமுள்ள இனிய பாடல்களை கேட்டு மகிழலாமே!
அவரது முகவரி/தொலைபேசி எண்கள்:

தெ.ரா. முரளி மனோகர்
('அடடே மனோகர்')
199 வெள்ளாளத் தெரு
புரசைவாக்கம்
சென்னை 600 084
(தொலை பேசி: 25325412)
(அலை பேசி: 9840061878)


-மோகன் பால்கி

வியாழன், 11 மார்ச், 2010

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?


ந்த நண்பரைப் பார்த்த உடன் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
அது 1980-85 களுக்கு இடைப்பட்ட காலம்.
அவர் பெயர் செழியன். (சில காரணத்துக்காக இங்கு பெயரை மாற்றி உள்ளேன்). ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு என்று அவர் ஒவ்வொரு விஷயம் வைத்திருப்பார். அவரைப் பார்த்த உடன் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இத்தனைக்கும் அவரது உடைகள் சற்று கிழிந்தும், நல்ல காலணிகள் இன்றியும், கலைந்த தலைமுடி , மழிக்கப் படாத முகம் என்று சாதாரண தோற்றத்தோடு தான் இருப்பார்.

எனக்கு மனோ தத்துவத்தில் ஆர்வம் இருந்ததால், மனித உறவுகள், கோபம், பிரிவு அதற்கான காரணங்கள் என்று எதையும் ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் பழக்கம் சிறு வயது முதலே இருந்தது. அதனால், அவரை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். அதாவது, எதனால் அவரிடம்  மற்றவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆசை ஆசையாகப் பேசுகிறார்கள் என்று. சிரிக்கவே தெரியாத சில ஜடங்கள் கூட அவரைக் கண்டால் சிரித்துப் பேசி சகஜமாக பழகுவார்கள். என்ன மாயம் இது! அவர்களிடம் மைய இழையாக ஓடும் பொதுவான பேச்சு எதைப் பற்றியதாக இருக்கிறது? அதை ஆராயத் தீர்மானித்தேன்.

அவருக்கும் எனக்குமான உறவு அவரும் நானும் அந்நாட்களில் திராவிடர் கழக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதே. எனவே, எங்கு கூட்டம் நடந்தாலும் நிச்சயம் அவரைக் காண இயலும். அவரைப் பின்தொடர்ந்த படியே சில பல நாட்கள் ஆய்வு செய்ததில் எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் புலப் பட்டது.

அவரது பேச்சு எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் பேச்சாக, நலம் விசாரிக்கும் பேச்சாக, தகவல் அளிக்கும் பேச்சாக, பாராட்டும் பேச்சாக, நன்றி கூறும் பேச்சாக, உற்சாகம் தரும் பேச்சாக, கள்ளம் கபடம் அற்ற பேச்சாக மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்தேன்!

அவரது பேச்சு கிட்ட தட்ட இப்படி இருக்கும்:

"நான் காலையிலே உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த லெட்டர்-ஐ கொடுங்க. நான் அங்க தான் போகப் போறேன் - தந்துடறேன்"
" அய்யா! அந்த பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பம் தர ஆரம்பிச்சாச்சி- உங்க பையனுக்காக ஒரு நாள் சரவணன் கிட்டே கேட்டிருந்தீங்களே!"
" ஆமா! அன்னக்கி அந்த மழைல, பாவம் எப்படி போனீங்க - எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் சேர்ந்தீங்க"?
" தம்பி! நேத்து மீட்டிங்குல கலக்கிட்டீங்க. ரொம்ப நல்லா இருந்தது உங்க பேச்சு. வாழ்த்துக்கள்!"
இப்படிதான் இருக்கும் அவரது உரையாடல்!
பிறரிடம் அவர் உதவி கேட்பதாய் இருந்தாலும், " எனக்கு ஒரு சின்ன உதவி..முடிஞ்சா பாருங்க...ஒன்னும் நிர்பந்தம் இல்ல.."ன்னு சொல்லி விட்டு இயல்பாக கேட்பார். நிறைய நண்பர்கள் இருந்ததால் அவருடைய வேலைகள் வெகு எளிதாகவும் விரைவாகவும் முடிந்துவிடும்.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது! சிலரை நமக்கு அதிகம் பிடிப்பதும் - சிலரை ஏதோ காரணத்தினால் நம் மனம் தவிர்ப்பதும்!

மேற்கண்ட பேச்சையே இப்போது வேறு விதமாக மாற்றிப் பார்ப்போமா?

"நீங்க காலையிலே போற வழியிலே என் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா-ஒரு லெட்டர் இருக்கு-அவர் கிட்ட தந்துடுங்க "

உங்க வீட்டுப் பக்கத்துல அந்த பள்ளியிலே விண்ணப்பம் தர்றாங்க...வாங்கி வைக்க முடியுமா?

அன்னக்கி மழையிலே நிக்கறப்போ ஒரு பிளாட் பத்தி சொன்னீங்களே- விசாரிச்சுட்டீங்களா?

நேத்து மீட்டிங்குக்கு என்னால வர முடியலே....எனக்கு ஆபீஸ்-ல ஒரே டென்ஷன். இப்பக்கூட எப்பிடியோ அடிச்சி பிடிச்சி வந்தேன்"

மேற்கண்ட இரண்டு விதமான பேச்சும் பேச்சுதான்!

ஆனால், நம் உள் மனதில், முதல் விதப் பேச்சு ஒரு வித உற்சாகத்தையும்
இரண்டாம் விதப் பேச்சு ஒரு வித மனச் சோர்வையும் தருகிறது!

காரணம் வெளிப்படையானது தான் !
முதல் பேச்சில் பொது நலம், உள்நோக்கம் இன்மை, அன்பு, பிறர் மீது கரிசனம் வெளிப்படத் தெரிகிறது!
இரண்டாம் பேச்சில் தன்னை மட்டும் முன்னிறுத்திய தன்மை மறைந்து கிடக்கிறது!

அதாவது, சுயநலம், மற்றவர்கள் மீது வெறுப்பு உமிழ்தல், பரபரப்பு, இறுக்கமான மன நிலை, உழைப்பின் மீது நம்பிக்கை இன்மை, அடுத்தவர்களை குறை கூறுதல், நேரம் தவறுதல்-அதற்கு சாக்கு போக்கு கூறுதல், தனது மதம்/கட்சி அது சார்ந்த கொள்கைகளே உயர்ந்தது என்று விதண்டா வாதம் பண்ணி நேரக் கொலை செய்வது, துடுக்காகப் பேசி அடுத்தவர் மனதைப் புண்படுத்துவது, எப்போதும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்க வேண்டும் என்று, ஒரு வித
"தன் முனைப்போடு" (Egoful activities) செயல் படுவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தவறான நினைப்பு, மூடிய மன நிலை, ஆராயாமல் உடனடியாக
முடிவுக்கு வரும் குணம் (Jumping in to conclusions) இவை யாவும் கொண்ட ஒரு மனிதரை அல்லது இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடுகிறது. திடீரென்று இது நடக்கும்!

மேல் மனதுக்கு ஏன் எதற்கு இப்படி பிடிக்காமல் போகிறது என்று காரணங்கள் புரியா விட்டாலும், ஒருவரைப் பிடிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான காரணம் என்னவென்று ஆழ் மனதுக்கு மட்டும் எப்படியோ 'பளிச்' என்று தெரிந்து விடுகிறது!

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?

-மோகன் பால்கி
( நட்பு எப்படி இருக்க வேண்டும்? இங்கே சொடுக்குக! )

இது நம் நீரிழிவு (Diabetes) நோயின் அளவு!



00:00



KanneKaniyamuthe Movie contd
Movies
01:30 Song Sequence Music based
04:30 News (இது மட்டும் தான் சினிமா இல்லை) News based
05:00 Song Sequence Music based
07:00 Movie - Avathara Purushan Movies
09:30 Kodambakkam Movies
10:00 Movie - Vesham Movies
13:00 Movie - Doctor Amma Movies
16:00 Vanna Thirai Movies
16:30 Movie - Kizhakkum Merkkum Movies
19:00 Sirikalam Vaanga Film based
19:30 Thirai Minnalgal பிலிம்
20:00 Movie - Nilakkaalam Movies
23:00 Movie - Kanne Kaniyamuthe Movies

00:00 KanneKaniyamuthe Movie contd Movies

http://www.sunnetwork.org/tvschedules/schedule.asp?tv=ktv
மேற்கண்ட இந்த அட்டவணை. K-டிவி யின் ஒரு நாள் பொழுது (K TV Schedule for 11-Mar-2010) எப்படிக் கழிகிறது என்பதாகும். ஜீரோ ஜீரோ முதல் இருபத்து நான்கு மணி வரை ஒரே ஒரு அரை மணி நேரம் தவிர மீதம் யாவும் திரைப் படங்கள், மற்றும் திரைப் பாடல்கள். இந்த டிவி-என்று அல்ல-கிட்ட தட்ட எல்லா டிவி-களிலும் இது போல் திரைப் படங்கள்-சின்னத் திரைத் தொடர்கள்! மக்கள் பாவம் என்னதான் செய்வார்கள்!

வேறு சில காரணங்கள் இருப்பினும் இது போன்று திரைப் படம் உட்கார்ந்து பார்த்துப் பார்த்து உழைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு, நீரிழிவு நோய் பெண்கள் பலருக்கும் இப்போது வர ஆரம்பித்து விட்டது. முன்பெல்லாம் ஆண்களுக்குதான், அதுவும் ஒய்வு பெற்றவர்களுக்கு வரும். இப்போது, இளைஞர்களும், தான் விளையாடுவதை விட்டு விட்டு பிறர் ஆடும் கிரிக்கெட்டை மணிக் கணக்கில் பார்த்துப் பார்த்து உழைப்பற்ற சோம்பேறிகள் ஆகி நீரிழிவுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஓடி ஆட வேண்டிய சிறுவர் சிறுமிகளும் இதில் அடக்கம். இப்போதெல்லாம் தெருவில், வீட்டு வாசல்களில், கோவில்களில், மக்கட் கூட்டத்தைக் காண முடிவதேயில்லை. மயானம் போல் இருக்கிறது. எல்லோரும் டிவி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் என்று அந்த முட்டாள் பெட்டிகளிடமே (Idiot-Boxes) தஞ்சம் அடைந்து ஒரு "நடமாடாப் பிணங்களாக" மாறி வருகிறர்கள். கை-காலை ஆட்டுவது கூட இல்லை! இதற்கு இடையில், வேளை தவறாமல் சாப்பிட்ட உணவு மட்டும், சக்தி செலவில்லாமல் மீதம் உள்ள உடலின் சக்தி (Excess Glucose) அதிக க்ளுகோஸ்-ஆக சேர்த்து வைக்கப் பட்டு நீரிழிவு நோய் ஆரம்பம் ஆகிறது!

வரும் காலத்தில், அதாவது இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பார்கள் என்பது என் யூகம்!

-மோகன் பால்கி
(What is diabetes? What causes diabetes?மேலும் தகவலறிய இங்கே சொடுக்குக!)

ஞாயிறு, 7 மார்ச், 2010

தமிழருவி மணியன் உரை செய் - திருமந்திரம் !

ன்று மாலை எங்கள் பெரம்பூர் பகுதியில் "அன்ன தான சமாஜத்தில்" தமிழருவி மணியன் அவர்களின் "தீர்வு தரும் திரு மந்திரம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. அந்த வழியாக எதற்கோ சென்ற நான், தமிழருவி மணியன் என்ற பெயரைப் பார்த்ததும் உள்ளே சென்று அமரவும் அவர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நல்ல ஆற்றொழுக்கு போன்ற பிசிரற்ற நடை. மணியான உச்சரிப்பு. ஒரு உளவியல் நிபுணன் என்னும் பார்வையில், உதாரணங்களைச் சொல்லப் போய் அவர் தடம் மாறி விடாமல் மீண்டும் திரும்பி வந்து தலைப்பு சார்ந்த செய்திகளைத் தொடரும் கூர்த்த மதி யாவும் நான் கண்டு-கேட்டு ரசித்தேன். தேர்ந்த மனக் குவிப்பு உள்ளவர்கள் மட்டுமே அதைச் செய்ய இயலும். அதற்கும் நல்மன-நல் மொழி-நற்செயல்கள் அவசியம். அது மணியன் அவர்களிடம் அதிகம் உண்டு என்பது பகைவர்களும் ஏற்கக் கூடியதே! இல்லாவிட்டால் என் கால்கள் அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை ஒருபோதும் அழைத்துச் செல்லாது! நிற்க! திருமந்திரம் - திருமூலர் செதுக்கிய சிற்ப-உரை! அவர் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வரியாய் செதுக்கியது! அவரது சொந்த அனுபவங்களில் இருந்து! இந்தக் காலத்தில் பத்துப் புத்தகங்களைப் பார்த்து ஒரு புதியவன் புத்தகம் யாப்பது போலின்றி! திருமூலர், தானே சொல்கிற படி 'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்" என்கிறார்! ஓரிடத்தில் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" என்கிறார்! ஒவ்வொன்றும் நான்கு வரிப் பாடல்கள்!வெண்பா முறையில் எழுதி உள்ளார்! முதல் பாடல் என்ன தெரியுமா? "ஒன்றவன் தானே ; இரண்டவன் இன் னருள் நின்றனன் மூன்றினுள் ; நான்கு உணர்ந்தானைந்து வென்றன னாறு; விரிந்தன னேழும்பர்ச் சென்றனன்; தானிருந்தா நுணர்ந்தது வெட்டே"! ஒன்று அவன் தானே = இறைவன் ஒருவனே என்கிறார்! இரண்டு அவன் இன்னருள் = உரு - அரு ( matter & energy) அவனே! மூன்று நின்றனன் = படைத்தல், காத்தல், அழித்தல் நிலைகள். நான்கு உணர்ந்தனன் = அறம், பொருள், இன்பம், வீடு பேறு! ஆறு விரிந்தனன் = மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு ஆதாரங்களிலும் இறைந்து பரவிய இறைவன்! ஏழு உம்பர்ச் சென்றனன் = அதற்கும் மேலாக ஏழாவது தளமான சகஸ்ரார்-இல் சென்றவன் ! தான்இருந்தான் உணர்ந்தது எட்டே! = அங்கு ஒருவன் உணர்வது, தானே பஞ்ச பூதக் கலவையாகவும் சூரிய சந்திர மற்றும் அனைத்து உயிராகவும்-அதாவது எட்டாக தன்னை உணர்தல் ! திருமந்திரத்தில் எனக்குப் பிடித்த இரு பாடல்கள் என்ன தெரியுமா? "கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை தன்னியல் புண்ணி உணந்தோர் ஒரு சிறை என்னிது? ஈசன் இயல் பறியாரே ! " (2073) (வெறும் வார்த்தைக்) கற்றோர் ஒரு சிறை - என்ன ஒரு கம்பீரமாய்ச் சொல்கிறார் பாருங்கள்! "நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவு நின்றார் சிலர் தேவரு மாவர் நடுவு நின்றார் சிலர் நம்பனு மாவர் நடுவு நின்றா ரொடு நானுநின் றேனே!" (322) நடுவில் நிற்பது சுலபம் இல்லை! புத்தர் கூட (middle way) அதையே பேசுகிறார் ! எந்த மனிதனும் எதையோ சார்ந்து தான் வாழ்கிறான்-நடுவில் நிற்க முடிவதில்லை! இந்தியாவிலும் இல்லாமல் பாகிஸ்தானிலும் இல்லாமல் நடுவில்ஒருவன் வெறும் மனிதனாக இருப்பது அத்தனை சுலபம் இல்லை-இருந்தால் அவரே ஞானி-தேவர் என்கிறார் ! "நடுவு நின்றாரோடு நானும் நின்றேனே" என்று திருமூலர் சொல்வது எவ்வளவு சுகானுபவமாக பவ்வியமாக உள்ளது பாருங்களேன்! நேரம் கிடைக்கும் போது எனது தியான/உளவியல் பார்வையில் ஒரு சில பாடல்களுக்கு விளக்கம்-இந்த அர்த்தமாய்தான் இருக்கும் என்ற வகையில் எழுத வேண்டும் என்ற நினைப்பு நெடு நாட்களாய் உள்ளது! எனினும், அந்தக் குறையைப் போக்க திரு.தமிழ் அருவி மணியன் போன்ற சிறப்பான அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதால் நான் வேறு விஷயங்களில் எப்போதும் போல கவனம் செலுத்தலாம்! ஒரு இடத்தில நிலையாமை பற்றி உணர்த்த வந்த மணியன் அவர்கள், மனிதர்கள் நமக்கு அதிக பட்சம் தரப்பட்ட நாட்கள் 100 x 365 = 36500; அதற்குப் போய் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்ற போது அவை அர்த்தத்தோடு மவுனித்துப் போனது! இப்போதெல்லாம் ராப்பிச்சைக் காரனே ஏன் இல்லை தெரியுமா என்று கேள்வி கேட்டு விட்டு அதற்கு தானே பதில் சொல்ல முனைந்த தமிழருவி - அதற்கு காரணம் இக்காலத்தில் நம்மிடம் காணப்படும் அளவு கடந்த சுயநலம் - அதற்கு ஆதாரமாக நம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள Fridge-களே சாட்சி என்று சொன்ன போது எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது! திருமந்திரம் பற்றி மணியன் அவர்களைப் பேசச் சொல்லி வெறுமனே கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட வேண்டும்! பிறகு ஒரு விஷயம், நல்ல படித்தவர்கள் கூட்டமும் இருந்தது மேலும் ஒரு சிறப்பு! நீங்களும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு ஒரு முறை திருமந்திரம் படித்துப் பாருங்களேன்! (இங்கு கிளிக்குங்கள் நீங்களும் திருமந்திரம் இங்கு படிக்கலாம்) 
-மோகன் பால்கி

(இப்படி எல்லாம் நான் போற்றி புகழ்ந்து எழுதிய அந்த மனிதன் பிற்காலத்தில் திராவிடர் இயக்கங்களை (திமுக, அதிமுகவை) ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் பின்னால் அலைந்து கொண்டு, அவரை கட்சி ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டு, பிறகு அவருடைய தீய கனவு பலிக்காமல் புலம்பிக் கொண்டு இருந்ததெல்லாம் வரலாற்றில் அவர் பற்றிய மிகவும் அவலமான பகுதிகள்! அவர் வெறும் தமிழ் சார்ந்தவராக, இலக்கிய பேச்சாளராக இருந்திருக்கலாம்! அவர் உள்ளிருந்து வெளிவந்த திராவிட எதிர்ப்பு விஷம் மிகவும் கேவலமானது; அவர் மீது இருந்த மதிப்பு போய்விட்டது!)

மன்னர் ஆட்சியே எனக்குப் போதும்!


மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்டுவிட்டது என்று நம்ப முடியவில்லை!

இன்னும் சொல்லப் போனால் மன்னர் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறது.

காரணம், அன்றைய முகலாய மன்னர்கள் அல்லது அதற்கும் முன்னர் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் ராஜ போக வாழ்க்கையை விட அதிகமான சொகுசு வாழ்க்கை நமது மாநில மத்திய அமைச்சர்கள்/ அவர்களது குடும்பங்கள் வாழ்வது கண்கூடு. அன்றைக்காவது ஒரு நாட்டுக்கு ஒரு மன்னனும் அவனது ஒரே ஒரு குடும்பம்/சில பல மனைவியர்கள், ஒரு சில தேர்கள், கொஞ்சம் யானைகள், கொஞ்சம் குதிரைகள், கொஞ்சம் வைரம்-தங்க நகைகள், ஓரிரு அரண்மனைகள் என்று இருந்து விட்டு செத்துப் போனார்கள். இன்றைக்குப் பார்த்தால், சுதந்திரம்!!! பெற்ற இந்தியாவில் ஒரு 300 - 400 பாராளுமன்ற அமைச்சர்கள், 20 -25 மாநிலங்களில், ஒரு மாநிலத்துக்கு 100 - 300 எம்-எல்-ஏ க்கள், அதோடல்லாமல் மாநில அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், அரசுச் செயலாளர்கள், கலக்டர்கள் என்று ஒரு பெரிய மெகா-சைஸ் கும்பலே இருந்து கொண்டு ராஜ வாழ்கை அனுபவிக்கிறது.

பத்திரிக்கைகள் சொல்கிற புள்ளி விவரம், பொது மக்கள் பேசுவது, இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஒரு சாதாரண வட்டச் செயலாளர் ( ஆளும்/அல்லது ஆளாத கட்சியாக இருக்கலாம் ) முதற் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து வருவது தெரிகிறது. அதோடு, ஒரு அரசியல்/அரசு பிரமுகர் காரில் போனால் பின்னால் நூறு கார்கள், ஆயிரம் தொண்டர்கள் ஜே! ஜே! போடுவது, காலில் விழுவது, ஆங்காங்கு மேடை போட்டு அரசாங்கப் பணத்தில் இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தருவது! வழியெங்கும் தோரணங்கள்! வாழ்த்து Baner -கள், கொடிகள், அன்ன தானம், வஸ்த்ர தானம், கோவில் பூஜைகள், பண முடிப்புகள் வழங்குவது, இதையெல்லாம் பார்க்கும் போது, இந்த மக்கள் ஆட்சி முறை, ஆயிரக்கணக்கான குறுநில மன்னர்களின் தான்தோன்றித் தனமான ஆட்சி போலவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதிக ஓட்டைகள் உள்ள பானையாகவும் தோன்றுகிறது.

மக்களின் அரசு என்பது நூறு ரூபாய் வருமானம் வந்தால் அதில் தொண்ணூறு ரூபாயை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள "மக்கள் - அரசாங்கப் பசு", நூறு ருபாய்க்கு புல்லும், புண்ணாக்கும் வாங்கிப் போட்டால் பத்து ரூபாய்க்கு மட்டும் பால் கறக்கிறது!! கொடுமை! தொண்ணூறு ரூபாயை இந்த மாதிரி, வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் கொள்ளையடித்து விடுகிறான். உழைக்கும் மக்களுக்கு, நல்ல தண்ணீர், நல்லக் காற்று, நல்ல சாலைகள், பயமுறுத்தாத விலையில் அரிசி, பருப்பு எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நம் நாட்டு தொழில் மன்னர்களும், அரசியல் மந்திரிகளும் தவறாமல் இடம் பெறுகிறார்கள். நூறு கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், ஒரு சில "தற்கால குறு-நில மன்னர்களிடம்" மட்டுமே குவிந்து கிடக்கிறது! என்ன எழவோ! இதற்குப் பெயர் மக்கள் ஆட்சி! ஜன நாயகம்! வெங்காயம்!

எனக்கு என்னமோ அந்த பழைய காலத்தில் தலைக்கு மேல் கிரீடம் வைத்து மன்னர் வருகிறார்!பராக்கு! பராக்கு! என்று சொல்லும் ஒற்றை மன்னர் முடியாட்சியே சிறந்தது என்று தோன்றுகிறது!

உங்களுக்கு எப்படி?

-மோகன் பால்கி

சனி, 6 மார்ச், 2010

"தூசு - தொங்கப்பா" என்று ஒருவன் !!

...................அழகான வீடும்-மோசமான அரசாங்க ரோடும்!

ஒரு ஊரில் தூசு தொங்கப்பா என்று ஒருவன் இருந்தான்.
வேலை வெட்டி இல்லாதவன். அதனால், பகலில் தெரு மண்ணை எடுத்து ஜல்லடையில் போட்டு சன்னமாக சலித்து மூட்டை மூட்டையாக வைத்துக் கொள்வான். அதை நடு இராத்திரியில் காற்று வீசும் திசையில் வைத்து தூவுவான்.

அது போய் அந்தத் தெருவில் எல்லோர் வீட்டிலும் அடை அடையாகப் படியும். பிறகு, காலையில் போய் அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சில பணக்கார வீடுகளுக்குப் போய் கொஞ்சம் துடைத்து விட்டு, கையை காலை ஆட்டி விட்டு கைச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.


அந்த 'தூசு தொங்கப்பா' கதையாக இருக்கிறது நம்ம corporation மற்றும் High ways கதை! வருஷம் முழுவதும் தெருக்களை, சாலைகளைத் ஏதோ ஒரு காரணத்துக்காக தோண்டுவது.

மூடுவது-மீண்டும் தோண்டுவது!
தூசு தும்புகளைப் போட்டு மூடுவது!

அது அங்கு செல்லும் ஆயிரக்கணக்கான வண்டிச்சக்கரங்களில் பட்டு ஆகாயத்தில் மேல் எழும்பி, ஜாலியாக பறந்து வந்து நம் நுரை ஈரலுக்குள் போய் வசிக்க ஆரம்பித்து விடும்.
இது ஒரு நாள் ரெண்டு நாள் கதை அல்ல. பற்பல வருஷங்களாக இதே கதைதான். இத்தனைக்கும் நம்ம ஊரில் "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்" என்ற  ஒன்று...வெட்டியாய் இருக்கிறது..நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் போங்களேன்!
அவர்கள் மொத்தம் எத்தனை பேர், எவ்வளவு அரசாங்க சம்பளம் போகிறது, அப்படி என்னதான் தினமும் செய்கிறார்கள் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? எனக்கும் தான் தெரியாது- அதுக்கு நான் என்ன பண்ண?அது போகட்டும், அதைப் பார்க்க, பார்க்காமல் இருக்கத்தான் அரசு-அரசு என்ற ஒன்று எப்பவும் வந்து போகிறதே ! நமக்கு என்ன வீண் கவலை! அது தவிர பொதுவாகவே...

நமக்குதான் "Pollution" பற்றிய பிரக்ஞையே கிடையாதே!
நாம தான் எது பற்றியும் முணுமுணுக்கக் கூட மாட்டோமே!
யாராவது தப்பித் தவறி முணுமுணுத்தால், அதை 'உனக்கு அரசியல்-பகை'
என்று உடனே இன்னொருவர் சொல்லிவிடுவோமே!

சரி, மேற்படி அந்தப் பள்ளத்தில் ஒரு வருஷ காலத்துக்கு அப்பப்ப ஏதாவது ஒரு பெரிய லாரியோ, பஸ்சோ மாட்டிக்கொண்டு அவதிப் படும்!

இல்லையென்றால், அந்த பள்ளத்தின் மீது ஒரு சமாதி-மேடு மாதிரி என்னமோ ஒன்றைக் கட்டுவார்கள்! கண்ணில்லாதவன் கறி சமைச்ச கதையாய்!

அதன் மீது ஆயிரக் கணக்கான வண்டிகள், ஆண்டுக் கணக்கில், இமயமலை ஏறுவது போல், ஏறி இறங்கி செல்லும்! உள்ளே பயணம் செய்பவர் எப்படியோ உயிர் வாழ்ந்து தொலைக்க வேண்டும்! ( பாவம்! இந்த முழு நேர டிரைவர்கள்! குடலெல்லாம் இறங்கிப் போய் இருக்கும்!) சென்னையில், பல சாலைகளில், பல ஆண்டுக் கணக்கில் இருக்கும் மேடு-பள்ளங்கள், சமாதி மாதிரி ஒட்டு போட்ட தார் ரோட்டு வேலைகள் (patch works) இன்னும் என் மனக் கண்ணில் அப்படியே இருக்கிறது.

அழகழகான வீடுகள் கட்டி இங்கே என்ன பிரயோஜனம்?
இப்படி அசிங்கமான சாலைகளை வைத்துக் கொண்டு?
(உங்கள் மனக் கண்ணில் இந்த "மக்கள் அரசுகளின்"  தெரு-சாலைகளை மறைத்து விட்டு, வெளிநாட்டுச் சாலைகள் போல கற்பனை செய்து பார்த்தால்...நாம் எல்லோருமே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போலத் தான் இருக்கும்! அந்த அளவு தனி மனிதர்களின் கட்டிட அமைப்புகள் சிறப்பாக இருக்கின்றன! அதைக் கெடுக்கும் பின்புலத்தை அரசு சாலைகள், தெருக்கள், குப்பைகள் ஏற்படுத்துவது கண்கூடு!)

வீட்டுக்கு உள்ளே இருக்கிற வரைக்கும் நாம் எல்லோரும் ராஜா-ரோட்டுக்கு வந்தா நசுங்கிப் போன கூஜா!

இன்னும் மழைக் காலத்தில் எந்தெந்த சாலைகளில், தெருக்களில், வெள்ளம் வடியாமல் நிற்கும் என்பது நிறைய பேருக்கு அத்துப்படி. ஆனால் இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவே தெரியாதாம்! ( உலகத்தில் பல நாடுகளில், எவ்வளவு அழகான சாலைகள் உள்ளன! தொலைக் காட்சிகளில் தான் நாம் தினமும் பார்க்கிறோமே! நம் மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் அந்த நாடுகளுக்குப் போய், எப்படி அவர்கள் அந்த மாதிரி உருப்படியான சாலைகள், மேம்பாலங்கள் கட்டுகிறார்கள் என்று பார்த்துவிட்டு வரவேண்டும்.)  ஆனால் இது போல பலப் பல மழை காலங்கள் எப்பவும் போல வரும்-போகும்! இந்தத் தொல்லைகள் மட்டும் தலைமுறை கடந்தும் தொடரும்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தூசு பறக்கும் சாலைகள்!
 எப்படியோ....
வாழ்க! தூசு-தும்புகள்!
வாழ்க! மேடு பள்ளங்கள்!
வாழ்க! சமாதிகள்!
வாழ்க! வெள்ளம் தேங்கும் சாலைகள்!

-மோகன் பால்கி