Translate this blog to any language

வெள்ளி, 4 நவம்பர், 2011

"Rain-Chennai" a Menace! மழை காலச் சென்னை 'நரகம்' !



சென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம்! சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உளமார வரவேற்பார்கள்! ஆனால் சென்னைவாசிகள்  'ஐயோ இந்த மழை வந்து தொலைத்து விட்டதே' என்று சபிப்பார்கள்! 

காரணம் மழை அல்லவே அல்ல!
மழையின் பின் தொடர்ச்சியாக இங்கு வாழும் மனிதர்களுக்கு நிகழும் துன்பங்களே அவை!

அத்துன்பங்களில் 90% - த்தை  தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த /வருகிற மாநில அரசுகள் குறைத்து இருக்கலாம்! அனால் அது ஒரு 'சிந்துபாத்' தொடர் கதையாகவே இங்கு இருந்து வருகிறது! என்னைக் கேட்டால் குறைந்தது நாற்பது வருடங்களாக சென்னையில் தண்ணீர் தேங்கும் நூற்றுக்கணக்கான சாலைகள் தெருக்களை என்னால் எளிதில் சொல்ல முடியும்! இங்கு நெடுங்காலமாய் வாழும் சென்னை மக்கள் பலருக்கும் அது தெரிந்த இரகசியமே ஆகும்!


சென்னையில் மழையின் பின் விளைவுகளைப் பார்ப்போம்!

1  தெருக்களிலும் சாலைகளிலும் தேங்கும் மழை நீர்! (stagnant water)

2  மழை நீரோடு சேர்ந்த சாக்கடை நீர், சேறு, சகதி மற்றும் குப்பைகள்!
(rain water plus sewage wastes)

3  தெரு அல்லது சாலைகளில் தேங்கும் மழை நீருக்குள் மறைந்து கிடக்கும் 
திறந்த பாதாள சாக்கடை மூடிகள் /பள்ளங்கள்!
(hidden danger of opened man-hole covers)

4 உடைந்த/ சிதைந்த சாலைகள் மற்றும் ஒழுங்கற்ற நடைபாதை மேடைகள்!
(dilapidated and hazardous streets/roads/platforms) 

5 தண்ணீருக்குள் கிடக்கும் மின்சார வயர்கள்! (hidden live electric wires)

6 வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் போது நம்மீது தெறிக்கும் சாக்கடை தண்ணீர்! 

7 நடக்கக் கூட இடம் இன்றி தெருவில்/சாலையில் சூழும் 
மழைநீர்/சாக்கடை நீர்!

8 சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களால் மெதுவாய் நகரும் வாகனங்கள். அதனால் ஏற்படும் கால விரயம், எரிபொருள் விரயம், சக்திவிரயம், பண விரயம், கெட்ட பெயர், பரபரப்பு, கோபம், ஒருவருக்கு ஒருவர் போடும் சண்டைகள், அதன் பின்விளைவுகள்! (undue traffic due to ditches /dilapidated roads) 

9 மழைகால இரவுகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகையில் தெருவில் சூழும் இருள். அதனால் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் சற்று தூரம் நடப்பதற்கு கூட அஞ்சுவது! அட! வாகனங்களில் கூட ஆண்கள் போக தயங்கும் அளவுக்கு தெரு/சாலைப் பள்ளங்கள்! ( Frequent Power cut due to heavy rain/darkness in streets)

10 மழையினால் இத்தனை துன்பங்கள் இருக்கையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுனர்களும் வண்டி ஓட்ட அதிகம் சிரமம் கொள்கிறார்கள்! அதனால் பேருந்துகள்-ஆட்டோக்கள் போக்குவரத்தும் மழை நாட்களில் குறைந்து விடுகின்றன. விளைவு: அதிகக் கட்டணம்! அல்லது பிதுங்கி வழியும் பேருந்துகள். ( Risky driving/ Excessive charges)

இவை தவிர நான் சொல்ல மறந்த இன்னும் பல சிரமங்களும்  இருக்கலாம்!











இதையெல்லாம் ஒரு மாநில அரசு சரி செய்ய முடியவே முடியாதா?
"ஒரு சிறு மழையைக் கூட தாங்க முடியாத சென்னை" என்னும் அவப் பெயரை நம்மால் நீக்கவே இயலாதா?
உலகில் இதை விட அதிகம் மழை பெய்யும் நாடுகள் அதில் உள்ள அழகிய சாலைகள்/தெருக்களை நாம்தான் தொலைக் காட்சிகளில் தினமும் பார்க்கின்றோமே! அவ்வளவு ஏன். பக்கத்தில் உள்ள பெங்களூருவிலும்  (Bangalore)அய்தராபாதிலும் (Hyderabad) இதைவிட சிறப்பான சாலைகள்/ தெருக்கள் இருப்பதை நம்மில் பல பேர் பார்த்திருக்கிறோமே! மேலும், குஜராத் (Gujarat) அதை விட அழகாக இருப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்களே!



இனி தமிழ் நாடு மாநில அரசு செய்யவேண்டியது:

1 வருடா வருடம் தண்ணீர் தேங்கும் சாலைகள்/தெருக்களை பிரித்து இனம் காணுதல். சிறப்பு கவனம் தருதல் !
(Finding out the low-lying water lagging streets/roads)
2 மத்திய அரசு போடும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான தரத்தை உறுதிப் படுத்துதல்! ( Ensuring an high standard like in National high ways roads)

3 நல்ல தகுதியுள்ள பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் வேலைகளை ஒப்படைத்தல்! (நாலு ஆணி ஒரு கோணி வைத்திருக்கும் சிறிய 'லெட்டர்-பேட்'  ஆசாமிகளுக்கு காண்ட்ராக்ட் தந்து மாநில அரசின் பெயரைக் கெடுத்துக் கொள்வது ஏனாம்! மக்கள் பேசிக் கொள்வது போல "வேறு-வேறு" காரணங்களா?) ( Awarding the jobs to giant constructions companies)

4 ஒரு தெருவோ-சாலையோ போட்டால் குறைந்தது ஐந்து வருடங்கள் அவை பொத்தல் விழாமல் இருக்கவேண்டும் ! அடிக்கடி தெருக்களை தோண்டுவது-மூடுவது என்ற மடத்தனம் கூடாது. அதற்கேற்ற படி திட்டமிட வேண்டும்!
(Ensuring the good roads/street for another 5 years. Save hills and natural resources)
(மாத மாதம் 'தார்' போடுவது, மலைக்கற்களை உடைத்து ரோடு போடுவது இவற்றால் நம் இயற்கை வளங்களும் சாலைகளுக்குள் மறைந்து வீணாகின்றன!மலைகளை மீண்டும் மீண்டும் நம்மால் உண்டாக்க முடியுமா?)

5  மக்கள் பணத்தை வீணடிக்கும்/திருடும் கூட்டத்துக்கு கடும் "தண்டனைகள்" தந்து அவர்களின் சொத்துக்களை அரசு கையகப் படுத்தவேண்டும்!
(Do give corporal punishments to economic criminals & recover their assets)

6  நேர்மையான அதிகாரிகள் நிறுவனங்களுக்கு மக்கள் மதிப்பிட "பரிசுகள்" வழங்கி கவுரவிக்க வேண்டும்! ( Award prizes for genuine officers and companies)
(தண்டனை அல்லது பரிசு என்னும் முறை இல்லாமல் எந்த ஒரு அரசும்/ இயக்கமும்/ நிறுவனமும் உருப்படவே உருப்படாது! without the "Prize or Punishment method" no Govt/movement/sector can do any wonder ever)


எது எப்படியோ!
இந்த மழைக் காலம் வரும் திசம்பர் 20 வரை நமக்கு நீளும்!
அது வரை ஒரு பத்தடி தூரத்துக்கு முழுதாய் ஒரு பள்ளமோ பழுதோ இல்லாத எந்தவொரு தெருவையோ/சாலையையோ நாம் சென்னையில் பார்க்க முடியாது! அது நம் சென்னை வாசிகளின் தலை எழுத்து! 
பார்த்துப் பார்த்து நாம் நடக்க வேண்டும்; நம் உடம்பும் வாகனமும் பழுது படாமல் காக்கவும் வேண்டும்!
மேலும், இப்பொழுதே சென்னையை சுற்றிலும் உள்ள ஆறு குளங்கள் அணைகள் நிரம்பி வருவதால் வெள்ளம் வரும் அபாயமும் கண்ணில் தெரிகிறது! அப்போது, சென்னை இன்னும் "புண்-பட்ட" நரகமாகும்!!

அதுவரை "சென்னை-நரகம்" சகித்து கவனமாய் நடக்கவும்  பயணம் செய்யவும் 
என் சக சென்னை நண்பர்களை திடீர் விருந்தினர்களை வேண்டுகிறேன்!

-யோஜென் பால்கி
yozenbalki
_________________________________
பிற்சேற்கை: ஒரு சோகமான செய்தி! இந்த வலைப்பூவை நான் எழுதிக் கொண்டிருந்த அல்லது வெளியிட்ட அதே வெள்ளிக் கிழமை இரவில் சென்னை தியாகராய நகரில் வடக்கு உஸ்மான் சாலையருகில் 24 வயது ஆசிரியை சரளா என்னும் இளம் பெண், மழை நீர் தேங்கி மறைத்திருந்த சாக்கடைப் பள்ளத்தில் விழுந்து உயிர் இழந்தாள்! மறுநாள் சனிக் கிழமை அச்செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தது! அரசின் அலட்சியத்துக்கு ஒரு அளவே இல்லையா? (ச்சே!இந்தியாவில் தான் இதுபோல் நடக்கிறது) அதன் பின் என்ன நடக்கும்...எப்போதும் போல செத்துப் போனவர்கள் குடும்பத்துக்கு மக்கள் வரிப்பணத்தையே எடுத்து கொடுத்து நல்ல பெயர் வாங்கும் சடங்கு தொடரும்! இது போன்ற அப்பாவிகள் இறப்பதற்கு  காரணமான அதிகாரிகளுக்குத் தண்டனை தருகின்ற செய்திகள் எப்போதாவது வந்ததுண்டா? பின் எப்படி நாடு உருப்படும்? என்ன கருமமோ!

Woman falls into stormwater drain in Chennai, dies
A 24-year-old woman died on Friday night after she fell inside a stormwater drain on North Usman Road, T. Nagar which was left open by authorities.
Pondy Bazaar police identified the deceased as M. Sarala of Anna Veethi, 1st Street in MGR Nagar. The victim was heading home after attending a Spoken English class at a school on Krishna Street in the area. Her body was recovered this morning and sent to Government Royapettah Hospital for post-mortem, police sources said.
http://www.thehindu.com/news/cities/...cle2600777.ece

புதன், 26 அக்டோபர், 2011

Indian Coins: A great Co(i)n-Fusions!! தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்!!

இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன! 
அச்சும் சரியில்லை;அளவுகளும் சரியில்லை!

இதோ கீழே உள்ள இந்த நாணயங்களை பாருங்கள் அதில் எதாவது கண்ணுக்குத் தெரிகிறதா? 

அதே அதற்கும் கீழே உள்ள பழைய நாணயங்களையும் பாருங்களேன் எவ்வளவு தெளிவாய் தெரிகின்றன!


இதெல்லாம் புச்சு....ங்கோ!!

ஆக, கையில் இருப்பது ஒரு ரூபாயா அல்லது இரண்டு ரூபாயா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தும் அளவுக்கு அளவும் எடையும் ஒன்று போலவே தோன்றும் வண்ணம் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன! இதனால் கடைத் தெருவில், பேருந்தில் என்று அங்கிங்கு எனாதபடி எங்கும் மக்களுக்கு குழப்பமே! குறிப்பாக அரசுப் பேருந்தில், தான் கொடுத்தது இரண்டு ரூபாய் என்று ஏதோ ஒரு பயணியும் இல்லை ஒரு ரூபாய் தான் என்று ஏதோ ஒரு நடத்துனரும் சண்டை போட்டுக் கொள்ளாத நாளோ அல்லது ஒரு பேருந்தோ  இல்லை எனலாம்! 

இந்த இலட்சணத்தில் ஐந்து ரூபாய் என்று ஒன்றை அச்சடித்து இருக்கிறார்கள் அது ஐம்பது பைசா நாணயம் அளவுக்கு சுருங்கிப் போய் கிடக்கிறது! மேலும், தற்கால இந்திய நாணயங்கள் யாவும் புடைப்புத் தன்மை குறைந்து அதிக வேலைப் பாடுகள் இன்றி தேய்ந்து போன தன்மையிலேயே காணப் படுகின்றன! கண்பார்வை உள்ளவர்களுக்கே சவால் விடும் இது போன்ற  நாணயங்களை பார்வை குறைபாடு உள்ளவர்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியும்? 

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் வந்த அல்லது மன்னர்கள் கால்  நாணயங்களை வைத்து ஒப்பிட்டால் இப்போது வந்துள்ளவை பெரும்பாலும்  'பாஸ் மார்க்' போடவே  முடியாதவை! பார்வை அற்றவர்களும் கண்டு கொள்ளும் வண்ணம் பழைய நாணயங்களின் அமைப்புகள் எப்படி உள்ளன என்று சற்று பாருங்கள்? வட்டம்..சதுரம்..வட்டத்தில் சிறு சிறு வட்டம்..பருப் புடைப்பான எழுத்துக்கள்..எவ்வளவு வசதி...அழகு!

அதுமட்டுமல்ல, ஒரு நாட்டின் நாணயம் என்பது:

1 உள்நாட்டு வர்த்தகத்துக்கு உதவும் ஒரு பண்ட-மாற்றுக்கு மாற்று!
2 அது பாமரர்களுக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் இருக்கவேண்டும்.
3 ஒளிகுறைவான நேரங்களிலும் அது 'இருவருக்கும்' புரியவேண்டும்.
4 பார்வைத் திறன் அற்றவர்களும் தொடு உணர்ச்சியால் அறியவேண்டும்.
5 நீண்ட காலம் உழைக்கும் வண்ணம் தயாரிக்கப் படவேண்டும்.
6 நாட்டின் கவுரவத்துக்கு அதுவும் ஒரு வாசல் ஆகும்!
7 அனைத்துக்கும்  மேலாக, 
நாணயங்கள் ஒரு வரலாற்றுப் பெட்டகம். சில நூறு/ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் நமது கலாச்சாரம்/பண்பாடுகளை நம் சந்ததிகளுக்கு சொல்ல இருக்கிற ஒரு தொல்பொருள் குறியீடும் ஆகும்!

ஆனால், இப்போதெல்லாம் வருகின்ற நாணயங்களை யார் டிசைன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை எப்படி வாழ்த்துவது/ என்ன பரிசளிப்பது என்றும் புரியவில்லை!!
இந்திய மக்கள் 120 கோடி பேரும் தினமும் மனதார "வாழ்த்தும் படி" ஓகோ என்று தயாரித்து இருக்கிறார்கள்!!

(இப்போது வரும் ரூபாய் நோட்டுகளும் அப்படித்தான்! மாலை நேரங்களில், கொடுப்பவருக்கும் சரி வாங்குபவருக்கும் சரி அது 100 ரூபாயா அல்லது 500 ரூபாயா என்று சந்தேகம் வந்து 
பத்து முறை சரிபார்த்தும் 'தொலைக்க' வேண்டி இருக்கிறது! தயவு செய்து அது போன்ற குழப்பம் தரும் நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே திரும்பப் பெற்றுகொள்வது 
மிகவும் உத்தமமானது! )

ஒரு வசதியும் இல்லாத அந்த காலத்தில் அச்சடித்த நமது பழைய நாணயங்கள் இதை விட எவ்வளவோ சிறப்பாக இருந்தனவே?
இதோ அந்தப் பழைய நாணயங்கள்!


இன்னும் சற்று பின்னோக்கிப் போவோமா?
அதாவது வெள்ளைக்காரர்கள் ஆண்ட நாட்களுக்கு...?
இதெல்லாம் 1947 க்கு முன் வந்த நாணயங்கள்! அவை இன்னும் அழகு!


The new two rupee coin recently introduced by the Reserve Bank of India (R.B.I.) is causing confusion in the minds of visually impaired people as it is difficult to distinguish it from the one rupee coin.
As per estimates, the number of blind people in the country is 10 million. And all of them have no means of ensuring that the stainless steel coin given to them is of the right denomination. The earlier two rupee coin had curved edges which helped them identify and judge its contours. But the new two rupee coin is similar to the one rupee coin except for the fact that it is slightly bigger in size.
“Now coins of all denominations are round. Even though the new two rupee coin is slightly bigger in size, one cannot really make out the difference,” says C.D.Tamboli, Director of Education, National Association of the Blind.
A R.B.I. spokesperson said the Bank did not have much say in the design process and that a Finance Ministry Committee awarded the assignment to the National Institute of Design.
It seems the National Institute of Design is yet not universal in its thought process.
http://goo.gl/CfoHJ

இன்னும் பழங்கால மன்னராட்சி நாணயங்களைக் காண இங்கே சொடுக்குங்கள்:

அதன் அழகில் நீங்கள் மதி மயங்கிப் போவீர்கள்! அவை
இன்னும்...இன்னும் அழகு!













-யோஜென் பால்கி
yozenbalki

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Cutting Trees & Expecting Rain? இருக்கும் மரங்களை இன்னும் வெட்டு (கவிதை)!




நான் மழை-மழை நான்!
தாயினும் சாலப் பரிந்தே ஊட்டும் வான் மழை!

ஜடமென நினைக்கிறாய் மனிதா-என்னை!
கண்ட இடத்திலும் கணக்கின்றி பெய்வதாய்;
சில நாள் பொய்த்து மோசமும் செய்வதாய்
சிற்றறிவால் எனை சிறுமை செய்கிறாய்!

சிந்தனையற்ற சிறுமதியாளனே
சொல்வது கேளாய்!
கன்றுக்கு வைத்த முலைப்பால் தன்னை
எந்தப் பசுவும் மண்ணில் சொரியா!
உழைத்த பணத்தை நல்லான் ஒருவன்
வீணர்களுக்கு தானமும் செய்யான்!

"விண்ணில்-உலவும்-சிந்தனை" நான்!
உன் வறண்ட பூமியில் பொய்திடுவேனோ?
இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்துநீ
பாலை நிலங்களாய் மாற்றி வருகிறாய்!


ஏரி குளங்களை ஒழித்தும் பழித்தும்
உயர்ந்த 'சமாதிகள்' கட்டி வைக்கிறாய்!
ஒருசிறு செடியும் புழுவும் வாழா
சுற்று சூழலை வலிந்து செய்கிறாய்!



உன்னிடம் எனக்கென்ன வேலை-அற்பனே!
இன்னும் மேற்றிசை மேற்றிசை ஏகுவேன்!
வானோக்கி தவம்செய் காடுகள் மீதும்
"பச்சை பசுந்தரைப் புற்கள்" மீதுமென்
அன்பின் மிகுதியால் அளவாய்ப் பொய்வேன்!
நீ இருக்கும் மரங்களை இன்னும் வெட்டு!



வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஜனநாயகத் திருடர்கள்! Democratic Thieves!!

நாடு நாய்களிடம் போய்
நாட்கள் ஓடி விட்டன!

மக்கள் பிணி தீர்க்கும் 
மனமிலா தலைவர்கள் 
இந்தத் தேசம் முழுவதும் 
புற்று நோயாய் பரவிப் போயினர்!

முடிமன்னர் ஆட்சியை 
முடித்த மடமையில் 
கிடைத்த பரிசு 
இதோ!
ஊரை அடித்து உலையில் போடும் 
ஜனநாயகத் திருடர்கள்!

உழைக்கும் மக்களின் 
அடிப்படைத் தேவைகள் 
எதுபற்றிய அக்கறையுமின்றி 
நகர்கிறது காலம்!

அன்று

தாடி மீசை ஒட்டி 
அதிகாரிகள் அறியாவண்ணம் 
"நகர்வலம்" வந்து
குறைகள் களைந்து 
ராஜ பரிபாலனம் செய்த 
பழங்கால 'ஒரு-மன்னன்' 
எங்கே;

இன்று...

ஏற்றிய கண்ணாடியும் 
ஏசியின் சொகுசுமாய் 
முன்னும் பின்னும் 
வண்டிகள் மறைத்து 
பூனைகள் புடை சூழ 
வாரிச் சுருட்டும் 
"ஆயிரம்-மந்திரிகள்" 
பதவி சுகம் எங்கே..?

ஆனாலும்...
ஒன்றும் கிழித்தபாடில்லை!

மன்னர் ஆட்சிக்குப் பிறகு
இருந்தது-கெட்டதுதான் மிச்சம்!

வெள்ளைக்காரன் கூட 
இந்தக் கொள்ளைக்காரர்களை 
பின்னுக்குத் தள்ளி 
நல்லவனாகிப் போனான்!
நாளுக்கு நாள்
இந்த தேசத்தில் 
விஷமாய் உயரும் விலை வாசி..
சிதிலமடைந்த உட்கட்டச் சாலைகள்....

மூஞ்சியில் விழுந்து 
பாதை மறைக்கும் 
பறக்கும் குப்பைகள்...
பெருக்காத தெருக்களில் 
பெருகும் தூசு...
இரத்தம் உறிஞ்சும் கொசுக்கள்...
சாக்கடை கலந்த குடிநீர்..
தொப்புள் கொடி துவங்கி 
சுடுகாடு வரைக்கும் 
தொடரும் கையூட்டு...

ஸ்விஸ் வங்கியில் 
இலட்சம் கோடிகளில் பதுங்கிய 
ஏழைகளின் உழைப்பு...
விதவிதமான
கல்விச் சுரண்டல்..
இன்னும் ஒழியாத
சா'தீய' கலவரங்கள்... 
அன்றாடம் நிகழும் 
கொலை கொள்ளைகள்..
மகளிர்-குழந்தைகள் மீது
பாலியல் வன்முறை..

கறி-சோறு போட்டு 
குற்றவாளிகளை கொஞ்சும்
சிறைச் சாலைகள்.... 
கிரிமினல்களின் அரசியல் பிரவேசம்..
பொறுப்பிலா அதிகாரிகள்...
அரசுப் பணியாளர்கள்...
அடிப்படை வசதியற்ற 
இந்திய கிராமங்கள்...
பட்டினிச் சாவுகள்..

அதற்கும் மேலாய்...
விண்வெளிக்கு இராக்கெட் அனுப்பும் 
வல்லரசு இந்தியாவில்...

த்...த்...தூ...! 
நன்னீர் மற்றும் 
கழிப்பிடம் தேடியே 
தொலைகிறது வாழ்வு!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

Correct Your children But Cripple-Not ever! குழந்தைகளை கண்டிக்கலாம்; தண்டிக்காதீர்கள்!


சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், 'சர்க்கஸ்' தான் நினைவிற்கு வருகிறது. 
மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் 'படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்'?என்று கேள்வி வேறு கேட்பார்கள்.


குழந்தைகளை கையாள்வது எப்படி: பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும்பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்டபடி திட்டுகிறோம். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம். அடுத்து குழந்தை தன்னையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கலாம்.


அடிக்காமல் வளர்ப்பது எப்படி என்கிறீர்களா? குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதைஉணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக,நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்: மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமைஉண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது. உதாரணமாக 8 மாதக் குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.
ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், 'பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு' என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்து விடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். 

ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு,சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.'இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்துவளர்க்கிறோம்' என்று நினைப்பார்கள். 

இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் (Khalil gibran) என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 "குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால்,உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை" 
என்றவரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. 
நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக் குள்ளாகக் கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? 
பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாமே!

நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால்,வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா? குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக,விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசிப் பேசித்தான் வளர்க்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், "நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட்" என்று திட்டிக்கொண்டே இருந்தால், அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும். எனவே, மனதளவில்பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 

இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். 
கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு. 

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது. 
தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக் குள்ளாக்குவது. 

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். 

மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்து விடக்கூடாது. 
குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

-நன்றி: புதிய தென்றல்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

Be Extremely Careful: Your child can be a target for Religious Conversion! மதம் மாற்றும் கயவர்கள் - உங்கள் குழந்தைகள் ஜாக்கிரதை!


உலகம் முழுவதும் இயற்கையாய் அமைந்த காடுகளையும் மனிதன் அமைத்த பூந்தோட்டங்களையும் நாம் காணுகிறோம். அதில் வித விதமான வண்ணங்கள் உடைய மலர்கள் மலர்கின்றன. மல்லிகை, முல்லை, சம்பங்கி,.ரோஜா இன்ன பிற ஆயிரம் வகை மலர்கள்! உலகில் ஆண்களை விட பெண்களுக்கு மலர்கள் என்றால் கொள்ளைப் பிரியமுண்டு. சிலருக்கு மல்லிகை பிடிக்கும் சிலருக்கு அது ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு எல்லா மலர்களையுமே பிடிக்கும். 

இதில் கவனிக்கப் பட வேண்டிய செய்தி என்னவென்றால், உலகின் எந்த நாட்டுத் தோட்டத்திலும் ஒரு மல்லிகை மலரை மட்டும் வைத்துக் கொண்டு பிற மலர்களை எல்லாம் அழித்து விடுவது அல்லது பிற மலர்களுக்கு மல்லிகை நிறத்துக்கு "வெள்ளை வண்ணம் பூசுவது" என்ற முட்டாள்தனத்தை எந்தத் தோட்டக் காரனும் செய்யமாட்டான்! ஒரு தோட்டம் என்பதே பல மலர்களின் வசிப்பிடம்!  இன்னும் மனிதக் கால்கள் படாத பல அடர்ந்த காடுகளிலும் பல ஆயிரம் வகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்படித்தான் இறைவன் இந்த உலகைப் படைத்தான்! 

ஆனால், வலிமையையும் அற்ப புத்தியும் உள்ள ஒரு அரசன் தனக்கு மல்லிகை பிடிக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தனது தோட்டத்தில் இருக்கும் பிற மலர்களை எல்லாம் ஒழித்து விடுகிறான். அதோடு தனது நாட்டில் வேறு மலர்களையே எங்கும் தான் காணக் கூடாது என்று சட்டமும் இயற்றுகிறான். அத்துடன் நிற்காமல், வேற்று நாடுகள் மீது படையெடுத்து அவற்றையும் வென்று அங்கும் மல்லிகை தவிர்த்த பிற மலர்களை அழித்து விடுகிறான்! 

இப்போது உலகம் முழுதும் வெண்மை நிறம், பசுமை நிறம் தவிர்த்த பிற வண்ணங்களை தோட்டங்களில் காண முடியவில்லை! முகத்தில் அறைவது போல் உலகம் எங்கும் மல்லிகை... மல்லிகை... "வெள்ளை" மல்லிகை! இப்போது மல்லிகையின் வாசம் தாங்காமல் பலர் மயங்கி விழுகிறார்கள்! பிற மலர்களை நம்பி வாழ்ந்த பூச்சிகளும் வண்டுகளும் பரிணாமத்தில் அம்மலர்களோடு சேர்ந்து காணாமல் போகின்றன! தேனீக்கள் பலவும் இறந்து படுகின்றன! உலகம் வெறுமையாகிப் போகிறது!

இதைத்தான் செய்ய விரும்புகிறார்கள் மதப் பித்தர்கள்!

தான் நம்பும் மதத்தை பிற மதத்தினரும் நம்ப வேண்டும் அந்த மதத்திற்கு அவர்கள் மாற வேண்டும் என்று மன மொழி செய்கைகளால் காரியம் ஆற்றுகிறார்கள்! அதற்காக. பிற மதத்து பிள்ளைகளை பெற்றோர்களின் சம்மதம் இன்றி பள்ளிகளிலும் வீடுகளிலும் வைத்து சிறுக சிறுக துர்போதனை செய்கிறார்கள்; மனமாற்றம் செய்கிறார்கள்! தக்க சமயம் பார்த்து அவர்களை "வெள்ளையடித்து" மதம் மாறத் தூண்டுகிறார்கள்! அதில் அவர்களுக்கு குரூர  இன்பம்!

இவ்வாறு ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளின் உள்ளத்தில் 
அவர்களின் பெற்றோர்கள் அறியாத வண்ணம் 
வேற்று மத நஞ்சு ஊற்றுவதும், 
பெற்றோர்கள் அறியாத வண்ணம்  அக்குழந்தைகளிடம் 
பாலியல் வன்முறையைத் தூண்டுவதும் இரண்டும் ஒன்றுதான்!

குழந்தைகள் தான் என்றில்லை பலவீன மனமுடைய பெண்கள் முதியவர்கள் என்று எவரையும் இவர்கள் சிறுக சிறுக இவ்வாறு வெள்ளையடித்து விடுகிறார்கள்! கரைப்பார் கரைத்தால் கல்லும்தான் கரையுமே!

இதன் பின்னர்தான் இருக்கிறது துன்பங்கள்! அப்படி மனம்/மதம் மாறிய குழந்தைகள்/பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது! உள்மனதில் ஒரு புதிய மதச் சிந்தனையும் வெளிமனதில் பெற்றோர்களுக்காக நடிப்பதுமாக அவர்கள் கொஞ்ச காலம் அல்லாடுவார்கள்! தக்க வயது/தருணம் வந்ததும் புறத் தூண்டுதல்களால் தனது மதத்தை உதறி விட்டு வேற்று மதத்தை தழுவார்கள்!
அதன் பிறகு இந்தக் கூட்டத்திலும் இருக்க முடியாமல் அந்தக் கூட்டத்திலும் இருக்க முடியாமல் கிடந்து தவிப்பார்கள்! ஒரு பண்டிகை ஒரு நல்ல நாள் என்று வரும் போது இங்கும் ஒட்ட முடியாமல் அங்கும் ஒட்ட முடியாமல் ஆகிவிடும்! இதையெல்லாம் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்! 

தான் பிறந்து  வளர்ந்த ஒரு மதத்தை விட்டு வேறுமதம் மாறுகின்ற ஒரு பெண் அல்லது ஆணுக்கு காலப் போக்கில் பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகின்றன.
பிறந்த மதம் சார்ந்த மனிதர்கள் அவனை/அவளை விலக்கி விடுகிறார்கள்! எந்த நல்லது-கெட்டதுக்கும் அழைப்பதில்லை; சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை! இப்போது அவனுக்கு /அவளுக்கு புதிய மதம் மட்டும் கூட இருக்கிறதே ஒழிய பழகிய மனிதர்கள், உறவுகள் எவரும் கூட இருப்பதில்லை! மேற்படி நிலைமையின் தீவிரம் புரிய வரும் போது காலங்கள் பலவும் அப்போது கடந்து விட்டிருக்கும்!! வெறும் சித்தாந்தத்துக்கு மயங்கி உறவுகளைக் கோட்டை விட்ட கசப்பான உண்மையும் அங்கு தெரிய வரும்! மதமாற்றம் என்பது வெறும் அலங்கரிக்கப் பட்ட சிறைவாசம் தான் என்பது ஒருவருக்குத் தெரிய வந்தாலும் அதை வெளிப்பட சொல்ல இயலாது!

நான் கேட்கிறேன்! மல்லிகைப் பூ சூடியவருக்கு மரணமில்லையா என்ன??!! 
இன்ன மதத்தை சார்ந்தவர்களுக்கு நோய் வருவதில்லை என்றோ இறப்பு விகிதம் குறைவு, அவர்களுக்குள் சண்டை சச்சரவு இல்லை, முன்னேற்றம் அதிகம் என்றோ அறிவியல் பூர்வமாக எவரேனும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பின் ஏன் நம்மிடம் இந்த "வெள்ளையடிக்கும்" மும்முரமும் மூர்கத்தனமும்? நன்னீரில் வாழும் ஒரு உயிரை ஒரு சாக்கடைக்குப் பழக்கினால் கூட நாளடைவில் அவ்வுயிர்க்கு அந்த இடம் பிடித்துப் போகிறது! அதற்காக ஒரு கூட்டத்தில் வாழும் உயிரைப் பிரித்து வேறொரு சூழ்நிலையில் நிரந்தரமாகத் தள்ளும் வன்முறை நன்முறையா? அந்தப் பாவம் நல்லதா?

எது எப்படியோ, இதையெல்லாம் மூர்க்கக் குணம் கொண்ட "மத-மாற்ற பேர்வழிகள்" கேட்கவே மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்! எனவே உங்கள் குழந்தைகளை நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! அவர்களிடம் யாரும் பாலியல் வன்முறை நிகழ்த்த முயற்சிப்பதை கவனமாகத் தவிருங்கள்! அதைவிட கவனிக்க வேண்டியது மதமாற்ற-வன்முறை! எனது சமூகத்திலேயே அப்படி பல கசப்பான மத மாற்றங்கள் கடந்த 30 வருடங்களில் நடந்து வருகின்றன. அதனால் தான் சொல்கிறேன்! உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் சரிவர பராமரிக்க வேண்டும். 

குறிப்பு: கொசுக் கடியில் இருந்து தப்பிக்க எனது சமூகத்துக்கு கொசு வலை போர்த்திகொள்ள சொல்லி வலியுறுத்துவது என் கடமை! அதையே இங்கு செய்கிறேன்!


நண்பர்களே!

நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கடைபிடிக்க வேண்டியன:

1   உங்கள் மதப் புத்தங்கங்களை அவ்வப்போது படித்துக் காட்டுங்கள்!

2   தினமும்/வாரந்தோறும் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்!

3   நீங்கள் சார்ந்துள்ள மதத்துக்கு பத்தில் ஒரு பாகமாவது செலவழியுங்கள்!

3   வேற்று மதத்தவரோடு உங்கள் குழந்தைகள் பழகும் போது "ஒரு கண்"           வையுங்கள்!  நடவடிக்கைகளை கண்காணியுங்கள்!

4   அவர்களது கோவில்களுக்கு பிரசார மண்டபங்களுக்கு குழந்தைகளை அனுப்பாதீர்கள்! ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் விழுந்தாலும் அது வீணே! மீண்டும் அது பால் ஆகாது!

5  உங்கள் வீட்டில் நல்லது கெட்டது நிகழ்கையில், அல்லது வீட்டில் யாரேனும் நோய்வாய்ப் படும்போது  "அழையாத விருந்தாளியாய்" வந்து 
ஜெபம் செய்வது, அவர்களது மதப் புத்தகம் வாசிப்பது போன்றவற்றை தயவு செய்து அனுமதியாதீர்கள்! இனிப்பு தடவிய மயக்க மருந்துக்குப் பலியாகாதீர்கள்! உங்கள் குழந்தைகளும் பெற்றோர்களே 'பச்சை கொடி' காட்டிய தைரியத்தில் 'வேறு மார்க்கம்' போய்விடுவதற்கு நீங்களே ஒரு மூல காரணம் ஆகி விடாதீர்கள்!

6  நீங்கள் நீங்களாகவும் மற்ற மதத்தினர் அவர்களாகவே இருக்கட்டும்! ஒரு மல்லிகை ரோஜாவாகவும் மாற வேண்டாம்! அதே போன்று
ஒரு ரோஜா, மல்லிகையாகவும் ஆக வேண்டாம்! அது அதன் இடத்தில் அது-அது இருந்தால் போதும்! 

7  வேற்று மதப் பள்ளிகளில் உங்கள் குழந்தை படிக்கும் போது கவனமாய் இருங்கள்! முன்கூட்டியே உங்கள் குழந்தைகளிடம் 'அவர்கள் அப்படித்தான்!  ஒரே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு தற்பெருமை பேசுவார்கள்-கண்டு கொள்ளவேண்டாம்-நமக்கு அதைவிட பல ஆயிரம் புத்தகங்கள்/பெருமைகள்/கோவில்கள்/பொக்கிஷங்கள்  உண்டு!" என்று ஒரு வார்த்தை சொல்லி வையுங்கள்! 

8  ஈராயிரம் வருடங்கள் முன்பு கட்டிய ஆயிரக் கணக்கான கோவில்களில் சிலவிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன! அதற்காக நமது சிறப்பு வாய்ந்த கோவில்களை இடித்து விடாதீர்கள்-செப்பனிடுங்கள்! உங்கள் மதத்திலும் அக்கால சூழலுக்கு ஏற்ப சில-பல ஒவ்வாதன சேர்க்கப்பட்டிருக்கலாம்! அதை மட்டும் இக்காலத்தில் முனைந்து களைந்து விடுங்கள்! அதற்காக உங்கள் மதத்தை 'இதோ ஒழிக்கிறேன்' என்று புறப்படாதீர்கள்! நீங்கள் வசிக்கும் வீட்டில் கொசு இருந்தால் கொசு-வர்த்தி கொளுத்தி வையுங்கள்;குடியிருக்கும் வீட்டையே கொளுத்தாதீர்கள்!

9  உங்கள் மொழியை, இனக் கூறுகளை, பண்பாட்டு அடையாளக் குறியீடுகளை, கோவில்களை ஒரு போதும் ஒழித்து விடாதீர்கள்;நாடோடி சமூகம் ஆகி விடாதீர்கள்!

10 உங்கள் மூதாதையர்கள் மற்றும் நீங்கள் பிறந்து வளர்ந்த அந்த சூழ்நிலையை அடையாளக் குறியீடுகளை உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் நீங்கள் அப்படியே விட்டுச் செல்லுங்கள்! நாடோடிகள் போலின்றி விழுதுகள் பரப்பும் ஆல மரமாய் தழைத்து பெருகட்டும் உங்கள் குடும்பம்!  

முடிவாக, 
 மத-மாற்றப் பேர்வழிகளிடம் மிக்க கவனமாய் இருங்கள்!
அவர்கள் புதிய புதிய வழி முறைகளைக் கையாளுகிறார்கள்!
புதிய புதிய போர்வைகளில் திரிகிறார்கள்!
இரகசிய திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்கள்!

எல்லாமே, 
உங்கள் அடையாளங்களை அழிப்பதற்காகத்தான்!
உங்கள் குழந்தைகளைப் பிடிப்பதற்காகத்தான்!

கவனம்-கவனம் தோழர்களே!

yozenbalki